<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

20.6.22

மாணவிக்கு வந்த பிரச்சினை  

 நான் கணினி பயன்பாட்டியல் துறையில் துறைத் தலைவராக இருந்தபோது நடந்த நிகழ்வு இது. 


ஒரு நாள் நான் வகுப்பு முடித்து வெளியே வந்தபோது அந்த வகுப்பில் படித்துக் கொண்டிருந்த ஒரு முஸ்லிம் பெண் வேகமாக வெளியே ஓடிவந்தாள். சார் உங்களிடம் சில விஷயங்களைப் பேச வேண்டும் அனுமதிப்பீர்களா என்று கேட்டாள்.


என்னமா என்ன பிரச்சினை என்று கேட்டேன். தன்னை ஒரு முதுநிலை வரலாற்று மாணவன் (அவனும் முஸ்லிம்) தினமும் கல்லூரிக்கு வரும் போதும் போகும் போதும் தொடர்ந்து வந்து தொல்லை கொடுப்பதாகவும் இது தாங்கமுடியாத  மனத்துயரை அளிப்பதாகவும் சொன்னாள்.


காலையில் வீட்டிலிருந்து  கல்லூரி வரைக்கும் மாலையில் கல்லூரியிலிருந்து வீடு வரைக்கும் தினமும் அவன் என்னைப் பின் தொடர்கிறான் என்று சொன்னாள்.


உங்க அப்பாவிடம் இதுபற்றி பேசினாயா என்று கேட்டேன்.


இல்ல சார் அப்பா கிட்ட பேச முடியாது இந்தப் பிரச்சனை பற்றித் தெரிந்தால் உடனே அவர் என் படிப்பை நிறுத்தி விடுவார். கல்லூரிக்கு போக வேண்டாம் என்று சொல்லி விடுவார் என்று கண் கலங்கினாள்.


எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. சரிம்மா என்ன செய்யலாம் என்று பார்க்கலாம் என்று அவளை அனுப்பிவிட்டு நேராக வரலாற்றுத் துறைக்கு சென்றேன். துறைத் தலைவரான எனது நண்பர் பாட்ஷா அப்போது நீண்ட விடுமுறையில் இருந்தார்.


எனவே பிற ஆசிரியர்களிடம் பேசினேன். 


அந்தப் பெண்ணின் பிரச்சினையை சொன்னேன். உங்கள் மாணவரை நல்வழிப்படுத்தி இவளது வழியில் குறுக்கிடாமல் இருக்க வேண்டும் என்று  கேட்டுக்கொண்டேன். அந்த ஆசிரியர்கள் மிகவும் ஆறுதலாகப் பேசினார்கள். அந்த மாணவன் எங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறான். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று உறுதி அளித்தார்கள்.


அதன்பிறகு நான் கல்லூரி முதல்வரையும் சந்தித்து நடந்த எல்லாவற்றையும் சொன்னேன்.


அந்த மாணவன் அதன்பிறகு ஒடுங்கி விட்டான். சில நாட்கள் கழித்து அந்தப் பெண்ணை அழைத்து விசாரித்தேன். இப்போது அவன் பின்தொடரவில்லை என்று சொன்னாள்.


சில மாதங்கள் கழித்துத் துறைத் தலைவர்கள் கூட்டம் நடந்த போது கல்லூரி முதல்வர் இது பற்றிக் குறிப்பிட்டார்.


எல்லாப் பிரசினைகளையும் முதல்வர்தான் தீர்க்க வேண்டும் என்று நினைக்காமல் தானே நடவடிக்கை எடுத்து பிரசினையைத் தீர்த்து விட்டு எனக்குத் தகவல் தெரிவித்தார் என்று அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

| (0) விரிவான மறுமொழி

19.6.22

Projector lens hood 

 அழகப்பா கல்லூரியில் எத்தனையோ மறக்க முடியாத அனுபவங்கள். முப்பத்தி இரண்டு ஆண்டு ஆசிரியர் பணியில் எண்ணற்ற நிகழ்வுகள். எதை சொல்வது எதை விடுவது எதை மறப்பது எதை நினைப்பது.


ஒரு சில நிகழ்வுகளைச் சொல்ல முயற்சிக்கிறேன். அப்போது கணிதத்துறையில் முனைவர் ஜெயராமன் அவர்கள் துறைத் தலைவராக இருந்தார். கணிதத்துறையில் தேசிய அளவிலான மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள்.


நூலகத்திற்கு அருகில் மாநாட்டு அரங்கு ஒன்றை உருவாக்கியிருந்தோம்.


அதில் கணினி எல்சிடி ப்ரொஜெக்டர் போன்ற அனைத்து வசதிகளும் இருந்தன. நிறைய மாணவர்களுக்கான இருக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன 


அந்த மாநாடு நடந்த நாளன்று திரு ஜெயராமன் என்னை அவசரமாக அழைத்தார். உடனடியாக மாநாட்டு அரங்கிற்கு வாருங்கள் என்றார். அப்போது நான் வகுப்பில் இருந்தேன். வகுப்பு முடித்து வருகிறேன் என்றேன். இல்லை இல்லை மிக அவசரம்.


இங்கே வெவ்வேறு பல்கலைக்கழக பேராசிரியர்களும் கல்லூரி முதல்வரும் இருக்கிறார்கள். நீங்கள் ஒரு ஐந்து நிமிடம் மட்டும் வந்து விட்டுப் போங்கள் என்றார். வேறுவழியின்றி விரைந்து புறப்பட்டு சென்றேன்.


மாநாட்டைத் தொடங்க வேண்டியதுதான் பாக்கி. இங்கே கணினி வேலை செய்கிறது எல்சிடி ப்ரொஜெக்டர் வேலை செய்கிறது.


ஆனால் திரையில் படம் எதுவும் வரவில்லை எதோ மங்கலாக தெரிகிறது. எல்சிடி ப்ரொஜெக்டரில் ஏதோ பழுது இருக்கிறது. சற்று பாருங்கள் என்றார்.


அந்த ப்ரொஜெக்டரில் லென்சுக்கு ஒரு மூடி உள்ளது. அந்த மூடியை திறக்கும் வகையிலான ஸ்லைட் சுவிட்ச் கீழ்ப்பகுதியில் இருந்தது. நான் கையை உயர்த்தி எனது ஆட்காட்டி விரலால் அந்த ஸ்லைடு ஸ்விட்சை ஒரு புறம் தள்ளினேன். உடனே திரையில் மிகத் தெளிவாக படம் வந்துவிட்டது.


அந்த வினாடியில் அரங்கம் முழுதும் அதிர்ந்தது. சிரிப்பலைகளும் கைதட்டலும் விண்ணைப் பிளந்தன. ஜெயராமன் ஓடிவந்து என் கைகளைப் பற்றி குலுக்கினார். அந்த நாள் மறக்க முடியாத நாள் ஆகிவிட்டது...


| (0) விரிவான மறுமொழி

POST and BIOS 

 நான் இளநிலை இயற்பியல் ஆசிரியராக இருந்தபோது சி மொழிப்பாடம் நடத்த வேண்டியிருந்தது.


 அதற்காக நான் சி மொழியை கற்றுக்கொண்டேன்.


 வகுப்பு எடுக்கும்போது கணினியில் தொடக்க நிலையில் வரும் சுய சோதனை POST பற்றியும் அதற்கு அடிப்படையான BIOS பற்றியும் சொல்லிக் கொடுத்தேன்.


அருண்குமார் என்று ஒரு மாணவர் என்னிடம் இளநிலை படித்தபிறகு திண்டுக்கல் பொறியியல் கல்லூரியில் எம்சிஏ படித்து முடித்தார். கேம்பஸ் இன்டர்வியூவிற்கு சென்றபோது அவரிடம் இந்த இரண்டு கேள்விகள் தான் கேட்டிருக்கிறார்கள்.


போஸ்ட் என்றால் என்ன பயஸ் என்றால் என்ன இரண்டுக்கும் சரியாக பதில் சொல்லிவிட்டார்.


 வேலை கிடைத்து விட்டது. அன்று மாலையே எனக்கு போன் செய்தார். சார் நீங்கள் இளநிலை வகுப்பில் சொல்லிக்கொடுத்த இந்த இரண்டு விஷயங்களும் இன்று எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தது.


எம்சிஏ வகுப்பில் எல்லாம் இதை யாரும் சொல்லித்தரவில்லை. என்னுடன் படித்த பலரிடமும் இந்தக் கேள்வியை கேட்டு யாருக்கும் விடை தெரியாததால் விடை சொன்ன  எனக்கு வேலை கிடைத்துவிட்டது என்று சொன்னார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.


கணினித்துறையில் இன்று அவர் பல  உச்சங்களை தொட்டிருப்பார். அடிப்படைகளை சரியாக புரிய வைத்தால் போதும் ஒரு ஆசிரியரின் பணி நிறைவுபெறும்.

| (0) விரிவான மறுமொழி

7.6.22

பேத்திக்கு வரவேற்பு 

..


எங்கள் குடும்பத்தில்

எழிலார் நலஞ்சேரத்

தங்கமகள் வந்துதித்தாள்

தலைமகளை வரவேற்போம்.


வெள்ளையுள்ளம் கொண்டவனாம்

வெகுசமர்த்தன் தகப்பனைப்போல்

நல்லவளாய் நீவளர்ந்து

நாடறியப் புகழ்பெறுக


எண்ணற்ற நாட்கள்

இறையருளை வேண்டிநின்று

உன்னைச் சுமந்தவளின்

உளங்குளிர நீவளர்க


நெஞ்சத்தில் நேர்மை

நினைவெல்லாம் தூய்மை

வஞ்சகமே அறியாது

வாழ்ந்துவரும் மேன்மக்கள்


அப்பத்தா ஐயாபோல்

அருங்குணத்தால் உயர்வாய்நீ

எப்போதும் இறையருளால்

ஏற்றமே உன்வாழ்வில்.

| (0) விரிவான மறுமொழி

This page is powered by Blogger. Isn't yours?