<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

8.1.18

எனது சீனப் பயணம் ………….3

சீனப் பணத்தை யுவான் என்று அழைக்கிறார்கள். RMB, CNY என்பதெல்லாம் கூட யுவானையே குறிக்கும் சொற்களாகும். (இந்திய ரூபாயை Rs, INR,  என்றெல்லாம் வழங்குவது போல). பயணக்கட்டணத்தை சுற்றுலா அமைப்பாளர்களிடம் வழங்கிவிட்டாலும் நமது கைச்செலவிற்கு எனச் சிறிது பணத்தை எடுத்துச் செல்ல வேண்டுமல்லவா.

இருபதாயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான ரூபாயை அந்நியப் பணம் மாற்றும் நிறுவனம் மூலம் யுவானாக மாற்றி வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்குக் கடவுச்சீட்டு. பயணச்சீட்டு இரண்டுக்குமான நகல்களையும் வங்கிக் காசோலையும் அளிக்க வேண்டும்.

நான் ஒரு நிறுவனத்திற்குச் சென்று ஒரு யுவான் ரூ10.40 என்ற அளவில் சுமார் 5000 யுவான் வாங்கிக் கொண்டேன். எங்களுடன் பயணம் செய்த ஒருவர் ரூ10.27 என்ற மதிப்பிலும் மற்றொருவர் ரூ10.00 என்ற மதிப்பிலும் மாற்றியிருந்தார்கள்.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட HDFC, ICICI போன்ற வங்கிகளின் பண அட்டை Debit card இருந்தால் போதும். எந்த நாட்டிலும் VISA enable செய்யப்பட்ட ATM களில் உடனடியாகப் அந்த நாட்டுப் பணத்தைப் பெற முடியும். மிகச் சிறிய அளவாக இல்லாமல் கணிசமான தொகையை எடுக்கும் போது சேவைக் கட்டணம் குறைவே. முகவர் மூலமாக இல்லாமல் இவ்வகையில் பண மாற்றம் செய்வதே லாபகரமாக இருக்கும் என்று பிறகு கேள்விப்பட்டேன்.

சீனாவில் பொருட்களை வாங்குவதில் பெரும் இடர்ப்பாடு உள்ளது. மொழி தெரியாதது ஒரு குறை என்றால் ஒவ்வொரு பொருளையும் 7 முதல் 10 மடங்கு அதிக விலை சொல்கிறார்கள். நமக்கு உத்தேச விலை தெரியவில்லை என்றால் ஏமாறவே வாய்ப்பு அதிகம். Super Market போன்ற இடங்களில் மட்டும் ஒரே விலை கறார் விலை விற்கிறார்கள். ஆனால் அங்கே உள்ள பொருட்களின் வகை குறைவு. தேர்வு செய்ய வழியில்லை. பெரும்பாலான கடைகளில் ஆனை விலை குதிரை விலைதான். எனவே சீனப் பொருட்களை நம் ஊரில் நமக்குத் தெரிந்த வியாபாரியிடம் வாங்குவதே நலம் பயக்கும்.

இதனால் கொண்டு சென்ற 5000 யுவானில் 4000 பணமாகவே திருப்பிக் கொண்டுவந்து விட்டேன். அதை மீண்டும் இந்தியப் பணமாக மாற்ற மீண்டும் முகவரிடம் சென்று தரகுக் கட்டணம் வழங்கிய வகையில் இழப்பு மிகுதி.

நாம் வைரக்கற்களை மதிப்பது போல சீனர்கள் Jade என்ற கற்களைப் பெரிதும் மதிக்கிறார்கள். இந்தக் கற்களால் ஆன ஆபரணங்கள் செய்யும் தொழிற்சாலையைப் பார்வையிட்டோம். ஆனால் எதையும் வாங்க முடியவில்லை. வாங்கும் வகையில் விலை இல்லை.


அதே போல் முத்துக்கள் பட்டு போன்றவற்றுக்கான தொழிற்சாலைகளையும் பார்த்து வந்தோம்.
| (0) விரிவான மறுமொழி

7.1.18

எனது சீனப் பயணம் …….2


சீனாவிற்குச் செல்வது என்று முடிவானதுமே இணையத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்துத் தேட ஆரம்பித்தேன். தகவல் தொடர்புதான் பெரிய பிரச்சினையாகுமோ என்று தெரிந்தது.

சுற்றுலாப் பயணிகள் தமது கடவுச்சீட்டைக் கொண்டு சீன SIM வாங்கிக் கொள்ள முடியும் என்றாலும் சுமார் 100 நிமிடங்கள் இந்தியாவிற்குப் பேசவும் 500 MB அளவு தரவிற்கும் ஆகும் செலவு 200 யுவான் (2000 இந்திய ரூபாய்). ஐந்து நாட்களுக்கு இவ்வளவு செலவிட வேண்டாம் என்று தோன்றியது.

தொடர்வண்டி நிலையங்கள் போன்ற பொது இடங்களில் இலவச wifi இணைய வசதி கிடைக்கும் என்றாலும் அது நமது கைபேசியில் இருந்து சீன எண் ஒன்றைக் கொண்டு பதிவு செய்தால் மட்டுமே சாத்தியம். இந்திய SIM ஐக் கொண்டு நாம் தங்கியிருக்கும் விடுதிகளில் wifi வசதி இருந்தால் இணையத் தொடர்பு கொள்ளலாம். ஆனால் அதிலும் பெரிய இடர்ப்பாடு ஒன்று இருந்தது.

நாம் அதிகம் பயன்படுத்தும் Facebook, Whatsapp, gmail, google போன்ற எந்தச் செயலியும் சீனாவில் கிடைக்காது. Google Playstore ஐத் திறக்க முடியாது. இவை எல்லாம் சீன அரசால் தடை செய்யப்பட்ட செயலிகள். இவற்றுக்கு இணையான சீன மொழியிலான செயலிகளை சீனர்கள் பயன்படுத்துகிறார்கள். அந்த மொழி அறியாத நாம் என்ன செய்வது?

அதற்காக இந்தியாவில் இருந்து புறப்படும் முன்பே கைபேசியில் நல்ல VPN செயலி ஒன்றை நிறுவிக் கொள்ள வேண்டும். (Opera VPN, Turbo VPN போன்றவை நன்கு வேலை செய்தன.) இந்த செயலியின் வேலை நமது IP முகவரியை மாற்றி அளிப்பதும் இணையத் திருடர்களிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பதும் தான். அதனால் நாம் வேறு ஒரு நாட்டில் இருந்து இணையத்தில் உலாவுவதாகத் தோன்றும். இந்தச் செயலிகள் இருந்தால் Facebook, Whatsapp, gmail, google அனைத்தும் சீனாவில் வேலை செய்யும்.

இந்தச் செயலியை நான் நிறுவி இருந்ததால் என்னால் Whatsapp மூலமாக. தங்கியிருந்த விடுதியில் இருந்து செலவே இல்லாமல் இந்தியாவிற்குப் பேசவும் படங்களை அனுப்பவும் முடிந்தது.

அடுத்தது சீனாவின் குளிர். இது நம்நாட்டைப் போலவே அங்கும் பனிக்காலம். ஷாங்காய் நகர் கடற்கரை நகராக உள்ளதாலும் நிலநடுக்கோட்டுக்கு அருகில் உள்ளதாலும் அங்கே வெப்பநிலை 2 முதல் 10 °C இருக்கும் ஆனால் பெய்ஜிங் நகரம் அங்கிருந்து சுமார் 1200 கிமீ வடக்கே, மலைகள் சூழ்ந்த பகுதியில் இருப்பதால் வெப்பநிலை -5 முதல் -12 °C  இருக்கலாம் என்றார்கள். எனவே போதிய குளிர் ஆடைகள், குரங்கு குல்லாய், கையுறைகள், கால் உறைகள், கித்தான் சப்பாத்து (canvas shoe) போன்ற பலவும் வாங்க வேண்டியிருந்தது. எவ்வளவு இருந்தும் வாட்டி எடுத்த பெய்ஜிங் குளிரில் விரல் நுனிகள் விரைத்தும் மூக்கு நுனி சிவந்தும் உதடுகள் வெடித்தும் கண்கள் நீர் கசிந்தும் போனது தனிக்கதை. கனடிய அமெரிக்க குளிர் போல இல்லாவிட்டாலும் நமக்கு இதெல்லாம் புதிய அனுபவம் தான்.

இந்தியாவில் சாதாரணமாகக் கிடைக்கும் பல மருந்துகள் சீனா உட்படப் பல நாடுகளில் தடை செய்யப்பட்டவை. எனவே மருந்துகளைத் தேவையான அளவு மட்டும் அதுவும் பதிவுபெற்ற மருத்துவரின் மருந்துச் சிட்டையோடு எடுத்துச் செல்ல வேண்டும்.

சீன தேநீர் பற்றிச் சொல்லி ஆக வேண்டும். சுவையில் இந்திய தேநீருக்கு நிகராகா விட்டாலும் ஒரு கோப்பை 20 யுவான் முதல் 40 யுவான் வரை விற்கிறார்கள். (பத்தால் பெருக்கிக் கொள்ளுங்கள் இந்திய ரூபாயில் வரும்) எனவே எதற்கும் இருக்கட்டும் என்று துளசி இஞ்சி தேநீர்ப் பைகள் 50 வாங்கி வைத்துக் கொண்டேன். இது மிகவும் பயன்பட்டது.


| (0) விரிவான மறுமொழி

3.1.18

எனது சீனச் சுற்றுப் பயணம் ...1

சுற்றுலா செல்வதென்பதே மகிழ்ச்சி தரும் நிகழ்வு. அதிலும் வெளிநாட்டுச் சுற்றுலா என்றால் கேட்கவே வேண்டாம். முதன்முதலாக இந்தியாவிற்கு வெளியே நான் மேற்கொண்ட சுற்றுப் பயண அனுபங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

தொண்ணூறுகளிலேயே வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் எண்ணத்தோடு கடவுச் சீட்டு வாங்கிய போதும், அரசுப் பணியில் இருந்ததால் உரிய அனுமதிக்கு விண்ணப்பித்து அனுமதி பெற்று வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு இல்லாமலேயே அந்தக் கடவுச்சீட்டுக் காலாவதியாகி விட்டது. மீண்டும் புதிய கடவுச் சீட்டு வாங்கிய போது இம்முறை  எப்படியும் வெளிநாடு செல்ல வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது.

சில மாதங்களுக்கு முன் திடீரென ஒருநாள் என் தங்கை கைபேசியில் அழைத்து எந்த நாட்டுக்குச் சுற்றுலா செல்லலாம் எனக்கேட்டாள். இலங்கையா துபாயா சீனாவா என்று கேட்டதும் நான் சீனா செல்லலாம் என்றேன். நீண்ட நெடுங்காலமாக இரும்புத் திரைக்குப் பின்னிருந்து -உலகின் பார்வையில் படாமல் இருந்து - பிறகு விழித்து எழுந்து இன்று அமெரிக்காவிற்குப் போட்டியாக உலகின்  முதன்மை வல்லரசாக முயலும் அந்த நாட்டின் மீது எப்போதுமே எனக்குப் பிரமிப்பு உண்டு.

நம்மால் புறக்கணிக்கப்பட்ட புத்தம் சீனாவிலும் ஜப்பானிலும் தழைத்து வளர்ந்ததும் இன்றும் பெரும்பான்மையினர் அங்கே புத்த மதத்தினராயிருப்பதும் வரலாறு.

ரோமானிய போர்த்துகீசிய ஆங்கிலேய வியாபாரிகளை மதிக்காமலும் அவர்களுக்கு விலை போகாமலும் அவர்கள் வஞ்சக சூழ்ச்சி வலையில் விழாமலும் தமது நாட்டை தாமே ஆண்டவர்கள் சீனர்கள்.

பாரம்பரியமாக சப்பானைத் தம் எதிரி நாடாகக் கொண்டிருப்பது சீனா. இரண்டாம் உலகப் போரின் பிறகு சப்பான் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டிருந்த போதிலும் இன்று அதனைப் பின் தள்ளி முன்னுக்கு வரப் போராடிக் கொண்டிருப்பது சீனா.

சீனா மொழியே அவர்களுக்குப் போதுமானதாக இருப்பதால் அவர்கள் ஆங்கிலத்தைக் கற்கவில்லை. அதனால் வெளிநாட்டுப் பயணிகள் அவர்களுடன் தொடர்பு கொள்வதில், உரையாடுவதில் பெரும்இடர்ப்பாடு உள்ளது. எனவே சீனா செல்ல விரும்பும் எவரும் ஆங்கிலம் அறிந்த சீன வழிகாட்டி ஒருவருடன் செல்வதே நலம் பயக்கும். எனவே சீனப் பயணத்   திட்டங்களை வகுத்து அளிக்கும் பல்வேறு பயணமுகவர்களை இணையத்தில் தேடித் பார்த்தோம்.

நாங்கள் சைவ உணவு மட்டுமே உண்பதால் உணவுப் பழக்கம் பெரும் பிரச்சினைக்குரியதாக அமையுமோ என்றும் எண்ணம் இருந்தது.

எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு பார்த்தபோது மதுரை ஸ்ரீ முருகன் டிராவல்ஸ் நிறுவனத்தாரின் சீனப் பயணத் திட்டம் சிறப்பானதாகத் தெரிந்தது.  டிசம்பர் 25 முதல் 30 வரை ஆறு நாட்கள் - ஷாங்காய், பெய்ஜிங் - இரண்டு நகரங்கள் மட்டும்  - பயணக் கட்டணம் 80 ஆயிரம் மட்டும்.

கட்டணம் இவ்வளவு குறைவாக இருப்பதற்கும் காரணம் இருந்தது. டிசம்பர் சீனாவில் பனிக்காலம் வாட்டி எடுக்கும் குளிர் என்பதால் சீனர்கள் அதிகம் வெளியில் வருவதில்லை. இந்தியாவில் போலவே சீனாவிலும் ஏப்ரல் முதல் மே முடியவே கோடை விடுமுறைக் காலம் ஜூன் முதல் ஆகஸ்ட் முடிய நல்ல சுற்றுலாப் பருவம். ஆனால் இந்தக் காலங்களில் சீன நாட்டின் சுற்றுலாத் தளங்கள் அனைத்தும் தீபாவளி நெருங்கும் போது தி. நகர் எப்படி இருக்குமோ அப்படி கூட்ட நெரிசலில் திணறும். நவம்பர் முதல் மார்ச் முடிய பருவமற்ற காலம். கூட்டமும் குறைவு. தங்கும் இடங்கள் உணவு விடுதிகளில் கட்டணமும் குறைவு. எனவே தான் இந்த நேரத்தில் இப்படி ஒரு பயணத் திட்டத்தை அளித்திருந்தார்கள்.
| (0) விரிவான மறுமொழி

This page is powered by Blogger. Isn't yours?