<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

17.9.22

பேராசிரியர் தேசிகனார்.... 

 தமிழறிஞர் மா. கண்ணப்பன் அவர்களுடன் இன்று உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர் அவருடைய நண்பராகிய பேராசிரியர் தேசிகனார் பற்றிக் குறிப்பிட்டார்.


நான் பேராசிரியர் தேசிகனின் மாணவன் அவருடன் பலமுறை பல்வேறு இலக்கிய விவாதங்களை நடத்தி இருக்கிறேன் என்று சொன்னேன்.


அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக திருப்பாவை பற்றிய இந்த செய்தியை சொன்னேன்.


பேராசிரியர் தேசிகனார் அவர்கள் ஒரு நாள் வகுப்பறையில் பாடம் நடத்தும் போது கீழ்கண்ட பாடலை குறிப்பிட்டார்


ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு 

மூட நெய் பெய்து முழங்கை வழி வார 

கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய் 


அப்போது முதலாண்டு மாணவனாகிய நான் உடனே எழுந்து 


நெய் உண்ணோம் பால் உண்ணோம் நாட்காலே நீராடி 

மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்


என்ற திருப்பாவை பாடலை குறிப்பிட்டு இது ஆண்டாளிடம் உள்ள முரண்பாடு இல்லையா என்று கேட்டேன்.


பேராசிரியர் தேசிகனார் எவ்வளவு பெரிய தமிழறிஞர் என்பதை அந்த வினாடியில் எனக்குப் புரிய வைத்தார்.


நீ சொல்லிய  பாடல் திருப்பாவையில் எத்தனாவது பாடல் என்று கேட்டார். இரண்டாவது பாசுரம் என்று சொன்னேன்.

நான் குறிப்பிட்ட பாடல் 27வது பாசுரம்.


 நீ சொல்லியது பாவை நோன்பின் தொடக்கத்தில் நோன்பு தொடங்கும் போது எதையும் உண்ணக்கூடாது  இறை நினைவோடு இருக்க வேண்டும்.


ஆனால் நோன்பு முடியும் போது இறைவன் வழங்கும் சன்மானமாக புத்தாடைகளும் நல்ல உணவும் பெறுவோம் என்று தான் ஆண்டாள் சொல்கிறாள். இதில் எந்த முரண்பாடும் இல்லை என்றார் அவர். 


அன்று அந்த வகுப்பில் சுமார் 100 மாணவர்கள் எங்கள் விவாதத்தை பார்த்து பிரமித்து போய் அமர்ந்திருந்தார்கள்.


அப்போது நகரின் மையத்திலிருந்து கல்லூரிக்கு சைக்கிளில் தான் சென்று வருவோம். அவர் கை நிறைய புத்தகங்களை அள்ளிக்கொண்டு நடந்து வருவார். ஒருநாள் கல்லூரி வாசலில் அவரை பார்த்ததும் கீழே இறங்கி வணக்கம் தெரிவித்து அவரிடம் பேசிக்கொண்டே கல்லூரிக்கு நடந்து சென்றோம்.


நீ எங்கிருந்து வருகிறாய் எப்படி வருகிறாய் என்றெல்லாம் கேட்டார். நகரில் இருந்து தார்ச்சாலை வழியாக நேராக வருகிறேன் என்று சொன்னேன். (அப்போது பெரியார் சிலையிலிருந்து மணலில் இறங்கி வரும் குறுக்கு சாலை இருந்தது.)


குறுக்கு வழியில் வந்தால் விரைந்து வந்து விடலாம் அல்லவா என்று கேட்டார். இல்லை ஐயா முள் குத்தினால் தள்ளிக் கொண்டு வர வேண்டும் எனவே நான் நேர்வழியில் தான் எப்போதும் வருவேன் என்று சொன்னேன். உடனே சிரித்து விட்டார். என் தோள்களை தட்டிக் கொடுத்து நல்ல மாணவர்களின் நல்லாசிரியன் என்ற பெருமிதம் எனக்கு எப்போதும் உண்டு என்று சொன்னார்.


இதெல்லாம் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகள்.


| (0) விரிவான மறுமொழி

This page is powered by Blogger. Isn't yours?