<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

14.6.04

நோயற்ற வாழ்வு..5 

மனித வாழ்விற்கு, மற்ற எல்லா வசதி வாய்ப்புக்களையும் விட, நல்ல உடல்நலம் முதன்மையான தேவை என்று நான் கருதுகிறேன்.

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்”

என்று வள்ளுவரே சொன்னது போல நோயின் மூலகாரணத்தைக் கண்டறிந்து நோய் வராமலே செய்து கொள்வது அறிவின் பால்பட்ட பண்பாகும்.

சரி. எப்படியோ நோய் வந்து விட்டது என்ன செய்யலாம்? இன்றைய நிலையில் உடனே மருத்துவரிடம் ஓடுகிறோம்.

கருத்தியல் நோக்கு (Ideological view) அழிந்து பொருளாதார நோக்கு (Materialistic view) வலுப்பெற்று வரும் நமது சமுதாயச் சூழலில் பணமே குறிக்கோளாய், மிகவும் சீர்கெட்டுப் போன துறைகளுள் மருத்துவத் துறையே முதலாவதாகத் தோன்றுகிறது.

(அறிவுள்ளவர்களும் கற்றவர்களும் அரசியலையும் திரைப்படத் துறையையும் ஒருபோதும் நாடுவதில்லை என்பதாலும் அவை ________க்கும் ________க்கும் புகலிடமாய் போனதாலும் அவ்விரண்டு துறைகளையும் நான் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.)

ஆக படித்து பட்டம் பெற்றுப் பணிசெய்யும் துறைகளுள், பணத்திற்காக மனசாட்சியை இழந்து மக்களைக் கொள்ளை அடிக்கும் துறையாக இன்று மருத்துவத் துறை ஆகிவிட்டது. சேவை மனப்பாங்குள்ள, நோயாளியின் பால் பாசமும் பரிவும் கொண்டு, அவனது நலத்தைத் தலையானதென்று கருதும் மருத்துவர்களை மிக அரிதாகத் தேடித்தான் கண்டறிய வேண்டியுள்ளது.

இதற்கு மருத்துவக் கல்வி பலருக்கும் எட்டாக் கனியாக ஆக்கப் பட்டதும் காரணமோ என்றும் தோன்றுகிறது. எப்படியோ, பட்டம் பெற்றுவரும் மருத்துவர் பலரும் தம்மிடம் வரும் நோயாளிகளைத் தேவையற்ற சோதனைகளுக்கெல்லாம் ஆட்படுத்திக், கண்ட கண்ட மருந்துகளையும் உண்ணச் செய்து, தேவையற்ற அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு, அவர்கள் உடலை சோதனைக் கூடமாக்கி, அவர்கள் வாழ்நாள் முழுதும் ஈட்டிய பொருளையெல்லாம் கொள்ளை அடித்துக் கொள்வதைத் தான் அன்றாடம் கண்டு வருகிறோம்.

இதை எல்லாம் பார்க்கும் போது உடற்பயிற்சியின் தேவையை மிகவும் வற்புறுத்தத் தோன்றுகிறது. தினமும் பயிற்சி செய்யும் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புக் குறைவு.

உடற்பயிற்சியோடு நோய்களைப் பற்றிய அறிவும், எளிய வீட்டு மருத்துவம் அல்லது கை மருத்துவமும் ஒருவர் அறிந்திருக்க வேண்டும்.

எங்கும் இருளென்று புலம்புவதை விட ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்போம் என்ற எண்ணம் தான் இப்பதிவை நான் எழுதக் காரணம்.

ஒரு நண்பர் திருமண விருந்து ஒன்றுக்குச் சென்று வந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. நகரின் மிகப் பிரபல மருத்துவ மனைக்குச் சென்று மருத்துவரைச் சந்தித்தார். அவர் இரத்தம், சிறுநீர், மலம் எல்லாம் சோதித்துப் பார்க்கும்படி சொல்லி, பிறகு மருத்துவமனையில் உள் நோயாளியாகச் சேர்த்து மூன்று தினங்கள் இரத்தத்தில் உப்பு நீர் (சலைன்?) ஏற்றி, வீட்டுக்கு அனுப்பி வைத்தார். செலவு எவ்வளவு தெரியுமா? சுமார் மூவாயிரம் ரூபாய்கள் மட்டும்தான்.

இதே போன்ற சூழலில் நான் என்ன செய்திருப்பேன் தெரியுமா? ஒவ்வொரு முறை வயிற்றுப் போக்கு ஏற்பட்டதும் ஒரு கோப்பை தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை (சீனியும்) அதில் மூன்றில் ஒரு பங்கு உப்பும் சேர்த்து கரைத்துக் குடித்துக் கொண்டே இருந்திருப்பேன். மிகவும் கட்டுப்பாடற்ற நிலையில் வயிற்றுப் போக்கு சீர் கேடடைந்தால் மட்டுமே மாத்திரைகளை உட்கொண்டு இருப்பேன். அல்லது மருத்துவரை நாடியிருப்பேன். (உப்பும் சீனியும் கலந்த நீர் 90 விழுக்காடு நல்ல தீர்வு அளித்து விடும்)ஃ

நமது உடல் ஆண்டவனின் அற்புதங்களில் ஒன்று. அது தன்னைத் தானே எப்போதும் சீர் செய்து கொள்கிறது. மருத்துவம் உடலின் செயலுக்கு உதவுவதற்குத் தானே தவிர, உடலின் இயற்கைச் செயல்பாட்டை மீறி நாம் அதற்கு நன்மை செய்துவிட முடியாது.

அதனால் தான் மருந்து உட்கொண்டால் ஏழு நாட்களிலும் இல்லாவிட்டால் ஒரு வாரத்திலும் நீர்க்கோவை குணமாகி விடும் என்று சொல்கிறார்கள்.

மேலே நான் குறிப்பிட்டது ஒரு சிறிய உதாரணம் தான்.

அல்லோபதி (அல்லது ஆங்கில மருத்துவம்) என்று அறியப்படுவது ஒன்றும் எல்லா நோய்களுக்கும் சரியான தீர்வை அளித்துவிடவில்லை. இதற்காகத்தான் இரைப்பு நோய் யோகாசன முறையில் மட்டுமே குணமடையும் என்று முந்தைய பதிவில் மெய்ப்பித்திருந்தேன்.

மஞ்சள் காமாலை என்று அறியப்படும் நோய்க்கு நமது கிராமங்களில் வழங்கப்படும் கீழாநெல்லி மட்டுமே விரைந்த தீர்வை வழங்கமுடியும்.

மூட்டுக்கள் எலும்பு தொடர்பான எந்தத் தொல்லைக்கும் நமது நுட வைத்தியசாலைகளுக்கு ஈடாக எந்த மேலை மருத்துவமும் குணமளிக்க முடியாது. அதைவிடப் பல மடங்கு பணம் பறித்து நோயாளியின் துயரைக் கூட்டத்தான் முடியும்.

இணையத் தொடர்பு வசதிகள் இருப்பதால் நமது மருத்துவர்கள் செய்யும் பல அறுவை சிகிச்சைகள் தேவையேயில்லாதவை என்பது புரிகிறது. காசுக்காக நோயாளிகள் மிரட்டப் பட்டு ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப் படுகிறார்கள் என்று தோன்றுகிறது.

சித்த மருத்துவம் என்பது தமிழ் நாட்டில் நமது முன்னோர்களாகிய சிததர்கள் பின்பற்றியது. மூலிகைகளையும் புடம் போட்ட இரும்பு போன்ற உலோகங்களையும் மருந்தாகப் பயன்படுத்தும் முறை. பாரம்பரியமாகவும் அனுபவ வாயிலாக அறிந்தும் சித்த மருத்துவம் செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. சித்த மருத்துவக் கல்லுாரிகளில் பயின்று பலர் இன்று மருத்துவத் தொழில் செய்கின்றனர்.

ஆயுர்வேதம் என்பது (வட) இந்திய மருத்துவம். மூலிகைகள், மரப்பட்டைகள், மரப்பிசின் போன்ற இயற்கை முறைகளை மட்டும் பயன்படுத்தும் முறை.

யுனானி என்பது அரேபிய மருத்துவம். பெரும்பாலும் பறவைகள் மிருகங்களின் உடலின் பகுதிகளையே மருந்தாக இதில் பயன்படுத்துகிறார்கள்.

ஒவ்வொரு நோய்க்கு ஒவ்வொரு முறை சிறப்பு வாய்ந்ததாக அமையக் கூடும். எனவே எல்லா நோய்களுக்கும் ஆங்கில மருந்துகளை நாடுவதை விட்டுவிட்டு ஓரளவு நோயைப் பற்றியும் குணப்படுத்தும் முறைகளைப் பற்றியும் தெளிந்த அறிவோடு தீர்வைத் தேடுவது நலம்பயக்கும்.
<-----முந்தைய பகுதி......................அடுத்த பகுதி----->
|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?