<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

25.5.04

தும்மலோ தும்மல் 

கண்களும் கண்ணாடியும் பற்றி
செல்வராஜ் எழுதிய மிகச் சுவையான வலைப் பதிவைப் படித்தபின் என் மூக்கு பற்றி எழுதியே ஆக வேண்டும் என்ற உணர்வு எனக்குத் தோன்றியது.

ஏனென்றால் என் மூக்கோடும் தும்மலோடும் ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் போராடி அதற்கு ஒரு வேடிக்கையான தீர்வு இணையத் தொடர்பின் காரணமாகக் கிடைத்த கதையை அனைவரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று என் கைகள் துடிக்கின்றன.

நினைவு தெரிந்த நாளாய் .. மூன்று, நான்கு வயது சிறுவனாய் இருந்த காலந்தொட்டு ஒவ்வொரு நாள் காலையிலும் நான் தும்மிக் கொண்டே துயில் எழுவேன். அடுக்கடுக்கான தும்மல்கள் ஒவ்வொரு காலையும் நாற்பது .. அறுபது .. அல்லது நுாறு தும்மல்கள்.

காலை எட்டுமணிக்குப் பிறகு.. நல்ல வெய்யில் ஏறிய பிறகு தும்மல் தானாக நின்று விடும்.

தினந்தோறும் இப்படித் தானா என்றால் இல்லை. எப்போதாவது உடல் நலம் குன்றும் போது.. காய்ச்சல், இருமல், சளி என்று வேறு வகையான உடல்நலக் கோளாறுக்கு உள்ளாகும் போது.. அந்த நாட்களில் மட்டும்.. தும்மல் வராது.

என் தாய்க்கும் என்னை வளர்த்த என் பாட்டிக்கும் (என் தாயின் தாய் .. நாங்கள் ஆயா என்றழைப்போம்) நான் தும்மலின்றித் துயில் எழுந்தால் பெரிய கவலை தோன்றி விடும். “உடம்புக்கு என்னப்பா” என்று கரிசனத்தோடு கேட்டுவிடுவார்கள்.

ஆக எனது நல்ல உடல்நலத்துக்கு அடையாளம் தும்மியபடி துயில் எழுவது தான் என்பது என்னைப் பொருத்தவரை எழுதப் படாத விதியாகி விட்டது.

இலக்கிய ஆர்வம் தோன்றிய போது தும்மலைப் பற்றிய கவிதைகளைத் தேடிப் படித்திருக்கிறேன்.

வள்ளுவர் தும்மலைப் பற்றிப் பாடியவையே ஒரு நாடகமாகக் கருதத் தக்கன:

யாரோ நம்மை நினைப்பதால் நமக்குத் தும்மல் வருவதாக அந்தக் காலத்தில் ஒரு கருத்து இருந்திருக்கிறது.

எனவே வருகின்ற தும்மலை அவன் அடக்க முயற்சிக்கிறான். அதைக் கண்ட அவளோ ‘யாரோ உன்னை நினைப்பதை எனக்கு மறைக்கிறாய்’ என்று சொல்லி அழுதாளாம்.

“தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று”.

தும்மினால், வாழ்த்துவது வழக்கம்.

இருவரும் ஊடல்கொண்டு பேசாதிருந்த போது அவளைப் பேச வைப்பதற்காகத் தும்முகிறான். அவளோ வாழ்த்தியதோடு நின்று விடவில்லை. ‘யார் உன்னை நினைத்ததால் தும்மினீர்’ என்று சொல்லி அழத் தொடங்கினாளாம்.

“வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினேன் என்று”

பல்கலைக் கழக விடுதியில் தங்கிப் படித்தபோது என் அறை நண்பன் நிரந்தரத் தலைவலிக்கு உள்ளாகித் துடியாய்த் துடிப்பான். அவனுக்கு இருந்தது நீர் கோர்த்துக் கொள்ளுதலால் உண்டான (Sinus) தலைவலி.

வெய்யில் ஏறியதும் என் தும்மல் நின்றுவிடும். அவனுக்கோ வெய்யில் ஏற ஏறத் தலைவலி தாங்க முடியாமல் போகும். நான் என் தும்மலுக்கு மருத்துவம் செய்து கொள்வது பற்றி அப்போதெல்லாம் நினைத்துப் பார்த்ததே இல்லை. ஆனால் அவனோ எல்லா பிரபல நிபுணர்களையும் பார்த்து எல்லாவிதமான சோதனைகளும் செய்து கொண்டு வருவான்.

மூக்கிற்குள் ஒருவிதமான ஓட்டை போட்டு தலையில் கோர்த்த நீரை வெளியேற்றி ஒரு மருத்துவர் அவனுக்கு ஓரளவு குணம் அளித்தார். ஆனால் மறுபடி நீர் கோர்த்துக் கொண்டால் மறுபடியும் ஓட்டை போடுவதைவிட்டால் வேறு வழியில்லை என்றும் சொல்லியிருந்தார்.

அப்போது அவன் என்னிடம் சொன்ன வார்த்தைகள் வாழ்வில் மறக்க முடியாதவை:

நீ தினமும் தும்மிக் கொண்டே துயில் எழுவதால் உனக்கு நீர் கோர்த்துக் கொள்வதில்லை. இது இயற்கை உனக்கு அளித்த வரம். இல்லையென்றால் நீர் கோர்த்துக் கொண்டிருக்கும். அதனால் தலைவலி வந்திருக்கும். உனக்குத் தும்மலைத் தந்த இறைவனுக்கு நன்றி சொல் என்றான்.

கேட்பதற்கு நன்றாகத் தான் இருந்தது. ஆனால் வளர வளர, வயது ஏற ஏற, நிறைய நுால்களைக் கற்கக் கற்க, வேறுவிதமான பயம் எழுந்தது.

தினமும் தும்முதல் இயற்கைக்கு மாறான ஒரு செயல். எல்லோருக்கும் இயல்பாக இல்லாத ஒரு பழக்கம். இதை இப்படியே விட்டுவிட்டால் வயதான காலத்தில் வேறுவிதமான குறைபாடுகள் ஏதாவது ஏற்பட்டால் என்ன செய்வது?

நுட்பமான உறுப்புகளாகிய கண், காது, மூக்கு, தொண்டை அனைத்தும் ஒவ்வொரு தும்மலிலும் அதிர்வுக்கு உள்ளாகின்றன.
தும்மலே தொடர்கதையானால் பிற்பாடு எதில் கொண்டு சேர்க்கும்?

இத்தகைய பயம் வந்ததும் நானும் மருத்துவரிடம் செல்ல ஆரம்பித்தேன். எங்கள் ஊரில் எனக்கு நன்கு பழக்கமான மருத்துவர் ஒருவர் இதனை ஒவ்வாமை Allergy என்றே அடையாளம் கண்டார். Eosnophilia என்று அதற்கு ஒரு பெயர் இருப்பதாகக் குறித்தார்.

துாங்கும் போது என் உடலில் Histamines என்ற எதிர்ப்பான்கள் உருவாவதாகவும் அதன் காரணமாகவே தும்மல் வருவதாகவும் கூறி Piriton போன்ற Anti-histominic tablets பரிந்துரைத்தார்.

அதற்கு நல்ல விளைவிருந்தது. அந்த மாத்திரையை ஒவ்வொரு இரவும் உண்டால் அடுத்த நாள் தும்மல் இருப்பதில்லை.

அப்பாடா நிம்மதி. தும்மலிலிருந்து விடுதலை என்ற நம்பிக்கையோடு மருத்துவர் குறிப்பிட்டிருந்த மூன்று மாதங்களுக்கு அந்த மாத்திரையை உண்டேன். அந்த மூன்று மாதங்களும் தும்மலே இல்லை.

சரியாகத் தொன்னுாற்று ஒன்றாவது நாள் மாத்திரை சாப்பிடாத நாள். அடுத்த நாள் காலை தும்மத் தொடங்கினேன். அடுக்கடுக்காக.. அப்பாடா எவ்வளவு விடுதலை.. தும்மல் எவ்வளவு ஆனந்தம் என்று கூட அப்போது தோன்றியது.

ஆனாலும் அது தொடரலாமா? உடனே மருத்துவரிடம் ஓடினேன்.

“அது அப்படித்தான். தும்மலை நிரந்தரமாக எல்லாம் நிறுத்த முடியாது. தும்மக் கூடாது என்றால் மாத்திரை உண்ணுங்கள். பரவாயில்லை தும்மலாம் என்றால் மாத்திரையை விட்டுவிடுங்கள்” என்று சொல்லிவிட்டார்.

நான் அந்த மருத்துவரை விட்டுவிட்டேன். அவரை விட அதிகம் படித்த மருத்துவரைத் தேடி .. காது மூக்கு தொண்டையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களைத் தேடி.. மதுரை, சென்னை என்றெல்லாம் ஓடி ஓடிப் பலரையும் கண்டு, ஆலோசித்து, மருந்து, மாத்திரைகளை உண்டு உண்டு.. எதிர்பார்த்த நிரந்தர குணம் கிடைக்கவேயில்லை.

அதன்பிறகு ஒருமுறை பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் முழு உடல் பரிசோதனைகளும் செய்தும், முதன்முதலாக எங்கள் ஊர் மருத்துவர் சொல்லியதைத் தவிரப் புதியதாக எதையும் அவர்கள் சொல்லி விடவில்லை.

அவ்வளவுதான் தும்மல் நம் உடன் பிறந்த நோய். நாம் உள்ளவரை நம்மை விட்டு அது போகப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.

ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட மாத்திரையைத் தொடர்ந்து உட்கொண்டால் அதனால் எழும் பக்க விளைவுகளைப் பற்றிய பயமும் எனக்கு இருந்தது. அத்தகைய பக்க விளைவுகள் எதையும் விடத் தும்மி விட்டுப் போனால் என்ன என்று எண்ணத் தலைப்பட்டேன்.

ஆக என் தும்மல் புராணம் இத்துடன் முடிவுக்கு வருவதாக எண்ணிக் கொண்டீர்கள் என்றால் அதுதான் இல்லை.

இந்தியா முழுவதும் இணையத் தொடர்புக்கு வழி கிடைத்த போது, மின்னஞ்சலும் வலை உலாவுதலும் வழக்கமான ஒரு நாளில், பொழுது போகாமல் கூகிள் தேடுபொறியில் ‘காலைத் தும்மல்’ (morning sneezing) என்ற தொடரில் என்ன விதமான வலைமனைகள் காணக்கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு தேடினேன்.

இத்துறையில் ஆய்வு செய்த ஒரு மருத்துவரின் ஆலோசனை காணக் கிடைத்தது. அது என் வாழ்வின் மற்றொரு திருப்புமுனை என்றால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை.

அவர் சொல்கிறார்: “ஒவ்வாமைக் குறையுடைய நீங்கள் துாங்கும் போது உடல் குளிர்கிறது. காலையில் துயில் எழுந்ததும் உடல் வேகமாக சூடாக முயல்கிறது. எனவே சிலமுறை தும்முவதால் சுற்றுப்புறத்துக்கு ஏற்ற வெப்ப நிலையை உடல்பெற்று விடுகிறது. தும்ம வேண்டாம் என்று நினைத்தால் காலையில் படுக்கையில் இருந்து எழும்போதே சூடான நீரோ அல்லது தேநீரோ அருந்துங்கள்.”

இவ்வளவுதான் மருத்துவம். ஆனால் அவர் சொல்லியது நுாற்றுக்கு நுாறு உண்மை.

தினமும் படுக்கும் போது பல்துலக்கிய பிறகே துாங்கும் எனக்கு காலையில் வாய்மட்டும் கொப்பளித்த பிறகு வெந்நீர் அருந்துவது எளிது. அதைத் தொடர்ந்து செய்தேன்.

என் தும்மல்.. நிரந்தரமாகவே என்னை விட்டுப் பிரிந்து சென்றது.

|
Comments:
Dear Aachimagan,

Thanks for your tips. I have been suffering from the same disorder for quite 10 years. Have tried the tablet called 'tritofen' and as soon as I am stopping it, I am getting back the sneezing again.

You won't believe, six months back I went to Tirumala by walk from Alipiri. By intuition, I controlled myself to breathe only with nose during the said four hours.

From the very next day, there is no morning sneezing !!!

nakeeran@yahoo.com
 
நன்றி,நானும் இது போன்ற நிலையில் தான் உள்ளது.எனக்கு தும்மளுடன் காது அரிப்பு அதிகமாக உள்ளது.இதற்கு எதெனும் விடயம் உள்ளாத?
 
I remember that you have been taking piriton and nowlearnt the secret of hot water thx. ananthu.
 
Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?