<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

22.5.04

குடிநீர்க் காவலரின் கொள்கை முழக்கம் 

காந்திய நெறியில் வளர்ந்தவர் சிந்தனையாளர் பழ.கருப்பையா. இந்திராவின் நெருக்கடி நிலையை எதிர்த்தும் காரைக்குடியின் நிலத்தடிக் குடிநீர் கொள்ளை போவதை எதிர்த்தும் பெரும் அறப்போர் நடத்தியவர்.

இவற்றுக்கெல்லாம் மேலாகத் தனித்தமிழ் ஆர்வலர். கடல்மடையெனத் தமிழ் மேடைகளில் முழங்கும் பேச்சாளர். நான் சின்னஞ்சிறுவனாய் இருந்த காலந்தொட்டு விரிந்த விழிகளோடு அவரது கொள்கை முழக்கங்களைக் கேட்டு வந்திருக்கிறேன்.

சிலநாட்களுக்கு முன்பு அவரது நுால் ஒன்று எனக்குப் படிக்கக் கிடைத்தது. “கண்ணதாசன் : காலத்தின் வெளிப்பாடு” என்ற இந்த நுாலில் கண்ணதாசன் என்ற கவிஞனின் நிறைகுறைகளை ஒருபால் சாராமல் ஆய்வு செய்திருக்கிறார் பழ.கருப்பையா. (வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை. ஆண்டு: 2001) தமிழண்ணல் இந்நுாலுக்கு முன்னுரை எழுதியுள்ளார்.

இந்த நுாலைப்பற்றி நான் இங்கே குறிப்பிடக் காரணம் புதுக்கவிதைகள் பற்றிய பழ.கருப்பையாவின் கருத்துக்களே. அவற்றுள் சிலவற்றை இங்கே தொகுத்துத் தருகிறேன். இனிவரும் வரிகள் பழ.கருப்பையா கூறுபவை:

கண்ணதாசனுக்குப் பிறகு பாட்டுச் சீரழிந்து சிறுத்து விட்டது. அது புதுக்கவிதையாகப் புது வடிவம் பெற்றது. ஒரு சிறு சுழிப்பு அந்த உரைப்பாவில் காணப்படுகிறது என்பது தவிர அதில் பாவுக்குரிய ஓசை நயமோ, சிந்தனை ஆழமோ பெரும்பாலும் காணப்படுவதில்லை.

வாராவாரம் வெளிவருகின்ற இதழ்களில் இடம் பிடிப்பதற்கு ஏற்றவண்ணம் அது ஒரு துணுக்காகச் சிதைந்து விட்டது.

அதில் ஓசைநயம் வேறு இல்லாத காரணத்தால் எழுதியவனேகூடத் தன்னுடைய கவிதையை நினைவில் வைத்திருந்து கூற முடியாது. இத்தகைய நிலைகளால் பாவிலக்கியம் அந்திம நிலைக்கு வந்துவிட்டதோ என்றுகூட அஞ்சத் தோன்றும்.

ஐம்பெரும் காப்பியங்கள் பிறந்த தமிழில் பதினைந்தாம் நுாற்றாண்டை அடுத்து உதிரிப்பாடல்கள் கோலோச்சியது போல தமிழ்நாட்டில் சில காலமாக அரைக் காசுக்கும் பெறாத ‘ஐக்கூ’ உரைவீச்சுகள் அரசோச்சுகின்றன.

மூன்று வரியில் பாட்டெழுதுவது ஒரு விந்தையா? ஒன்றே முக்கால் வரியில் உலகப் பேராசான் வள்ளுவன் பாட்டெழுதி இருக்கிறானே, படித்ததில்லையா? கொன்றைவேந்தன் ஒருவரிக் கவிதைதானே! ஆத்திசூடி அரைவரிக் கவிதையன்றோ!

பாரதியும் பாரதிதாசனும் இந்த அரைவரி விந்தையைப் பார்த்து வாயைப் பிளந்தால்தானே ஆளுக்கொரு புதிய ஆத்திசூடி எழுதினார்கள். அவர்களிருவருக்கும் சப்பான் இருப்பது தெரியாதா?

முச்சங்கம் வைத்து வளர்த்த முத்தமிழில் நீட்டி எழுதப்படுவதெல்லாம் உரைநடை; மடக்கி எழுதப் படுவதெல்லாம் கவிதை என்கிற அளவுக்குக் கவிதை மலினப்பட்டுவிடும் என்று யாரும் கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்கள். ஆனாலும் அப்படி நிகழ்ந்து விட்டதே! நொந்து கொள்வதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? தமிழுக்கு நேரம் சரியில்லை!

மரபை யாப்பில் மட்டும் உடைத்தால் போதாது; பண்பாட்டு நிலையிலும் உடைக்க வேண்டும் என்னும் வக்கிரப் போக்கைத்தான் இது (புதுக்கவிதை) காட்டுகிறது.

குமுகாயத்தைத் தலைகீழாகக் கவிழ்க்கின்ற முயற்சிதானே இது! நிறுவப்பட்ட அனைத்தையும் நொறுக்கிவிட வேண்டும் என்னும் வெறிதானே இதற்கு அடிப்படை!

பாட்டு பாட்டின் சாரத்தை இழந்து விட்டதே என்ற கவலை கூட இல்லை; பண்பாட்டின் சாரத்தை இழந்து விட்டதே என்ற கவலைதான் அடிவயிற்றைக் கலக்குகிறது.

கண்ணதாசன் உயிரோடு இருந்த போதே இந்த வசனகவிதை எனப்படும் உரைப்பா தலைதுாக்கத் தொடங்கிவிட்டது.

அதை ‘அலிக் கவிதை’ என்று கண்ணதாசன் சாடவும் செய்திருக்கிறார். இன்னும் சிறிது காலம் வாழ்ந்திருந்தால் இந்த ‘அலிக் கவிதைகளின்’ செல்வாக்கு கண்டு மனம் நைந்திருப்பார்.

ஆனால் அவற்றை அவருங்கூட மறித்திருக்க முடியாது. எல்லாம் கவிழும் போது கவிதை மட்டும் வாழுமா?

1970ல் இந்த உரைப்பாவின் ஆதிக்கம் தொடங்கி விடுகிறது. இது நீர்த்துப் போன தலைமுறையின் நீர்த்துப் போன பா.

இவ்வாறெல்லாம் பழ.கருப்பையா குமுறியிருக்கிறார்.

இன்றைய புதுக்கவிதை எழுதுபவர்களும் நல்ல சிந்தனையாளர்களும் இந்த உண்மைகளை உணரத் தொடங்கியிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை
ஆங்கொரு காட்டிடைப் பொந்தினில் வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சொன்றும் மூப்பென்றும் உண்டோ”

என்று பாரதி பாடியது போல உண்மையான தமிழ் ஆர்வலரின் உள்ளத்தில் தோன்றிய தீ, நல்ல தமிழ் உணர்வை நாடெங்கும் பற்றியெரியச் செய்யும் என்று நம்பிக்கை எனக்கு என்றும் உண்டு.

|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?