<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

21.5.04

ஈடுபாடா ஆடம்பரமா? 

அரசியல், திரைப்படம், கிரிக்கெட், புதுக்கவிதை இவற்றைப் பற்றியெல்லாம் பேசாவிட்டால் இன்று நமக்குப் பேசுவதற்கு வேறு தகவல்களே இல்லை என்பது போன்ற கருத்து எங்கும் காணப்படுகிறது. இவற்றைப் பற்றியெல்லாம் பேசுவதிலும் எழுதுவதிலும் கூட சில அடிப்படை வேறுபாடுகளைக் காண்கிறேன்.

ஒன்று தாம் பேசும், எழுதும் துறையைப் பற்றிய ஆழ்ந்த ஈடுபாடு; ஆர்வம்; அத்துறை பற்றிய முழு அறிவு; அந்தத் துறையின் வளர்ச்சி பற்றிய கனவு; அதற்கான ஒருவனது பங்களிப்பு இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

மற்றது வெற்று ஆரவாரம். எதைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் எல்லாவற்றைப் பற்றியும் ஒருவன் கூறும் விமர்சனம் அல்லது வெற்று ஆரவாரம் (வெட்டிப் பேச்சு).

“மாட்டுக்குச் சொரிந்து கொடு. அது நல்ல காரியம். மனிதனுக்கு ஒருபோதும் சொரிந்து கொடுக்காதே” என்று ஜே.ஜே.யில் சு.ரா. சொல்வதற்கு மாறாக மனிதனுக்குச் சொரிந்து கொடுக்கும் கருத்துக்கள்.

“கூட்டத்தில் கூடிநின்று கூவிப்பிதற்றலின்றி நாட்டத்தில் கொள்ளாரடி” என்று பாரதி நடிப்புச் சுதேசிகளை எள்ளி நகையாடியது போல நகையாடத் தகுந்த பிதற்றல்கள்.

கிரிக்கெட் தொடர்கள் ஏதும் தொடங்கி விட்டால் நாடெங்கும் கேட்கும் கூக்குரல்கள் எனக்குப் புரிவதேயில்லை. ஏன் எல்லோரும் கிரிக்கெட் பற்றியே பேசுகிறார்கள்?

எல்லோரும் பேசுகிறார்கள் நாமும் பேசாவிட்டால் நம்மை ஒதுக்கி விடுவார்கள் என்ற பயமா?

தன்னை நவநாகரிக சமுதாயத்தில் ஒருவனாகக் ‘காட்டிக் கொள்ளும்’ போக்கா?

ஓட்டங்கள் எத்தனை என்றும் விளையாட்டில் தோற்று ஓடியவர் எத்தனை பேர் என்றும் ஆளாளுக்குப் பேசித்திரிவது எனக்கு வேடிக்கையாகவும் விநோதமாகவும் தோன்றும்.

தமது தேசபக்தியையும் தம் தேசத்தின் வெற்றியையும் கிரிக்கெட் வீரர் முதுகில் ஏற்றி ஒரு நாள் போட்டியிலோ தொடர் போட்டியிலோ பணயம் வைத்து முடிவு கண்டுவிடும் மனப்பாங்கு சிறுபிள்ளைத் தனமாக எனக்குத் தோன்றுகிறது.

விளையாட்டு என்று கருதும் போது கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி, டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களுக்குச் சமமாகக் கிரிக்கெட்டை ஒருபோதும் நினைத்துப் பார்க்க முடிவதில்லை.

ஒருவகையில் பார்த்தால், ஆண்டான் அடிமைத் தனத்தின் எச்சமிச்சமாகத்தான் இந்த விளையாட்டை என்னால் காண முடிகிறது. பந்தடிக்க ஒரு தலைவனும் பொறுக்கிப் போட சில அடிமைகளும் கொண்டு தொடங்கியதாகத்தான் இது இருக்க வேண்டும்.

எந்த விளையாட்டிலும் பார்வையாளர்களும் பங்கேற்போரும் என இருபிரிவினர் இருப்பார்கள். ஆனால் இந்த விளையாட்டில் மட்டும் தான் பங்கேற்போரில் பலரும் பார்வையாளருடன் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதிலும் பெரும் கூத்து பல ஆட்டக்காரர்கள் மட்டையைத் தொடும் முன்பே ஆட்டம் முடிந்து போவதுமுண்டு.

அரைமணி நேரத்திலோ ஒரு மணி நேரத்திலோ ஆட்டக்காரர்களின் ஒட்டு மொத்தத் திறனையும் களத்தில் காணும் வாய்ப்பும், தொடங்கியது முதல் முடிவுறும் வரை ஒவ்வொரு விநாடியும் உணர்வுகள் பொங்க உச்சக்கட்ட விறுவிறுப்பை அளிக்கும் பாங்கும் மற்ற விளையாட்டுக்கள் போன்று கிரிக்கெட்டிற்கு ஒருபோதும் இருப்பதில்லை.

பொதுமக்களுக்கான ஊடகங்களும் விளம்பர நோக்கிற்காகப் பலநாட்டு நிறுவனங்களும் தேவையில்லாமல் ஊதிப் பெருக்கியது தான் கிரிக்கெட் மீதான மக்களின் ஆர்வக் கோளாறு என்று நினைக்கிறேன்.

சிந்திக்கத் தெரியாத பாமரர்களிடம் எதை வேண்டுமானாலும் திரும்பத் திரும்பச் சொல்லித் திணித்து விட முடியும் என்பதற்குக் கிரிக்கெட்டும் மற்றொரு உதாரணம்.

|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?