<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

15.5.04

அறிவாளிகளின் புதுக்கவிதைகள் 

நான் சிறுவயதில் படித்த கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. தெனாலிராமன் கதைகள் (அல்லது பீர்பால் கதைகள்) தொகுப்பில் படித்த கதை என்று நினைக்கிறேன்.

நெசவாளி ஒருவனிடம் அரசர் ஆடை ஒன்றை நெய்து தருமாறு கேட்கிறார். உலகில் அதுவரை யாரும் அணிந்திராத ஆடை. அதற்காக எவ்வளவு செலவு செய்யவும் அரசர் ஆயத்தமாக உள்ளார்.

அரசரின் மடமையைத் தனக்குச் சாதகமாக நெசவாளி பயன்படுத்திக் கொள்கிறான். அவரிடம் கணக்கில்லாத அளவு பொன்னும் பொருளும் கேட்டுப் பெறுகிறான். மிக உயர்ந்த பட்டாடை உடல் முழுதும் பொன்னாலான இழைகளோடு உருவாகி வருவதாகப் பொய் சொல்லி அரசரை நம்ப வைக்கிறான்.

வேலை முடியும் நாளும் வந்தது. அரசர் ஆடையை எடுத்துவந்து அணிவிக்குமாறு ஆணையிடுகிறார். அப்போது நெசவாளி “மூடர்களின் கண்களுக்கு இந்த ஆடை தெரியாது” என்று கூறி அரசருக்குப் புத்தாடை அணிவிப்பதாக பாவனை செய்கிறான் - நடிக்கிறான்.

அரசரின் கண்களுக்கு ஆடை எதுவும் தெரியவில்லை. ஆயினும் தன்னை யாரும் மூடன் என்று கருதிவிடக் கூடாதென்பதற்காக ஆடை மிக அழகாக இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார். அமைச்சர்களும் பணியாளர்களும் தம்மை யாரும் மூடன் என்று கருதிவிடக் கூடாதென்பதற்காக ஆடையின் சிறப்பை வானளாவப் புகழ்கின்றனர்.

ஆனால் உண்மையிலேயே புத்திசாலியான தெனாலிராமனுக்கு (அல்லது பீர்பாலுக்கு) நெசவாளியின் ஏமாற்று நாடகம் புரிகிறது.

சின்னஞ்சிறு குழந்தைகள் இருவரை அவன் அரண்மனைக்கு அழைத்து வந்து அரசரின் ஆடை எப்படி இருக்கிறது என்று கேட்கிறான். கபடமறியாத அக்குழந்தைகளோ, “அரசருக்கு வெட்கமே இல்லையா? ஏனிப்படிப் பிறந்த மேனிக்குப் பொது அரங்கில் அமர்ந்திருக்கிறார்” என்று சொல்லிச் சிரிக்கிறார்கள்.

அதன் பிறகுதான் அரசனுக்கு ஞானம் பிறக்கிறது. நெசவாளி தண்டிக்கப்படுகிறான்.

புதுக்கவிதைகளின் வீச்சு பற்றி யாராவது பேசும்போதெல்லாம் எனக்கு இந்தக் கதைதான் நினைவுக்கு வருகிறது.
|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?