<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

7.5.04

கவிதை அறிவியல் 

மேலைநாட்டுச் சிந்தனைகளை மேற்கோள் காட்டாவிட்டால் எழுதுபவனுக்குள்ள அறிவாற்றல் திறன் பற்றி நம்மவருக்கு ஐயம் தோன்றிவிடும்.

விவேகானந்தர் போன்ற ஞானச்சுடர் கூட சிகாகோ மாநாட்டில் பேசிய பிறகுதான் நம்மவரால் கவனிப்புக்குள்ளானார் எனும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்.

எனவே இன்று முழுக்க முழுக்க மேலைநாட்டு அறிவியல் கருத்துக்களின் அடிப்படையில் கவிதை என்பது என்ன என்று பார்ப்போம்.

அழகியல் கோட்பாடு பற்றி கணிதத்தில் ஒரு தனிப்பிரிவே உள்ளது. ஒழுங்கு, சமச்சீர் நிலை, ஒத்த தோற்றம் (Order, symmetry, resemblance) போன்றவற்றைப் பற்றிய வரையறைக்குட்பட்ட கோட்பாடுகள் உயர்நிலை கணிதத்தில் உண்டு.

கலை வடிவங்கள் யாவும் அழகியல் கோட்பாட்டுக்கு உட்பட்டவையே.

மனிதனின் உருவ அமைப்பே சமச்சீரானது அல்லவா? அவனது ஒரு பாதி, மறுபாதியின் பிரதிபிம்பம் அல்லவா? (One half of the man is the mirror symmetry of his other half).

புவியும், நிலவும், ஆதவனும் கோள்களும் பிற தாரகைகள் யாவும் கோள வடிவமுடையவை அல்லவா? கோள வடிவிலும் பார்க்க சமச்சீரான வடிவம் ஏதுமில்லை என்பதும் கணிதக் கோட்பாடு தானே. மேல்கீழ், இடவலம் என்று எப்படி நோக்கினும் நுாற்றுக்கு நுாறு சமச்சீரானது கோள வடிவம். - இயற்கை பிரபஞ்சம் முழுவதையும் அப்படித்தான் படைத்துள்ளது.

இதையெல்லாம் பார்க்கும் போது ஒரு மொழியின் ஆன்மாவாகிய கவிதை இயற்கையோடு உடன்பட்டு சமச்சீர் நிலையில் இருந்தால் மட்டுமே அது மக்களை எளிதில் சென்றடையும் - மக்கள் மனதில் நிலைபெற்றிருக்கும் - மக்களை மாமனிதராக்கும் என்று நான் நினைக்கிறேன்.

ஒழுங்கற்ற நிலையை அளக்கவும், வரையறுக்கவும் முரண்டு நிலை (entropy) என்றதோர் கருத்து இயற்பியலில் உள்ளது. ஒழுங்கற்ற நிலை வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது இயற்பியலாளர் முடிவு. (Entropy always increases) மனித முயற்சி இதற்கு எதிரான செயல்பாடு. மனிதன் ஒழுங்கமைப்பை உருவாக்கத் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறான்.

ஒரு எளிய உதாரணம்: ஒரு தோட்டத்தை அல்லது வயலை நீங்கள் கவனிக்காமலே விட்டுவிட்டால் அங்கே புல்லும் முள்ளும் புதரும் வளருமேயன்றி வாழையும் தென்னையும் நெல்லும் கரும்பும் ஒரு போதும் வளராது. அவற்றை வளர்க்க – ஒழுங்கை உருவாக்க – மனித முயற்சி தேவை.

துாக்கத்தில் உளறுதலும் கனவில் பிதற்றலும் நவீன சிந்தனை என்று மேலைநாட்டு எண்ணங்களை அடையாளம் காட்டிக் கூறுவதைக் காணச் சிரிப்பு வருகிறது.

இயற்பியலில் குழப்ப நிலை (chaos) என்றொரு கோட்பாடு உண்டு. இந்தக் குழப்ப நிலையை Higher orders of Approximation காரணமாக எழுந்ததென்பர்.

(Approximation என்பதை ஏறத்தாழ என்று தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். ஆனால் First order Approximation, Second order Approximation, Third order Approximation என்றெல்லாம் சொல்லும் போது இது பொருந்தவில்லை. ஆனால் நான் சொல்ல வந்த கருத்து முக்கியமானது என்பதால் ஆங்கில வார்த்தைகளை அப்படியே பயன்படுத்திக் கொள்கிறேன்.)

ஓர் உயிர் வாழ்வதற்குக் காற்றும் நீரும் முதலாவது தேவைகள் (தேவைகள் குறித்தான உளவியலாளர் மாஸ்லோவின் கருத்துக்களைப் பிறகு பார்ப்போம் இங்கே அறிவியல் மட்டும்.) இவற்றை வாழ்வதற்கான First order Approximation, எனலாம். இவ்விரண்டும் இன்றி வாழ்க்கை சாத்தியமில்லை.

அடுத்த நிலையில் உணவு, பிறகு உடை. இருப்பிடம். அன்பு காட்டக் குடும்பம். உறவு இப்படியாகத் தொடரும் அடுத்தடுத்த தேவைகளை Second order Approximation, Third order Approximation என்று வகைப்படுத்திக் கொண்டே போகலாம்.

கோயம்பேடு காய்கறி விலையும் கோயம்புத்துார் தொழில் வளர்ச்சியும் இதில் ஏதாவது ஓரிடத்தில் வரலாம் – எழுபத்திரண்டாவதோ தொன்னுாற்று ஏழாவதோ – அவற்றுக்கு இடம் இல்லை என்பதல்ல அவற்றை ஒதுக்குதலால் பாதிப்பு ஒன்றுமில்லை என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டியது.

ஒரு எளிமையான இயற்பியல் சமன்பாடு:

Rt = R0 (1 + ஆல்பா.t + பீட்டா.t2 + காமா.t3 + .. .. .. )

பள்ளிப் படிப்பு படித்த எவருக்கும் இந்தச் சமன்பாடு தெரியும். இதில் குறிப்பிட வேண்டிய கருத்து என்னவென்றால், பீட்டா.t2, காமா.t3 ஆகியவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் மிகுந்த குழப்பம் ஏற்படும் என்பதால் அவை எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு Rt = R0 (1 + ஆல்பா.t ) என்று மட்டும் குறித்துக் கொண்டு கணக்கிடுவர். அதுதான் First order Approximation,.

கவிதைக்கு படிமம் குறியீடு இவையெல்லாம் குழப்ப நிலை ஏற்படுத்தும் Higher orders of Approximation. ஒதுக்கித் தள்ளினால் ஒன்றும் மோசம் போகாது. ஆனால் First order Approximation ஆன உள்ளார்ந்த இசைத்தன்மையை ஒதுக்கித் தள்ளினால் அது உயிர்த் துடிப்பை இழந்து நிற்கும்.

என்ன இது மடத்தனமாக இருக்கிறது இலக்கியத்தை, கவிதையை அறிவியல் நோக்கில் காண்பதாவது என்று யாராவது முணுமுணுக்கக் கூடும்.

தமிழ்ப் பண்பாடும் தமிழ்க் கலாசாரமும் சார்ந்த, இவற்றின் பிரதிபலிப்பான தமிழ்க் கவிதைகளுக்கு, நமக்குக் கொஞ்சமும் ஒத்துவராத மேலைப் பண்பாட்டையும் வாழ்க்கை முறைகளையும் ஆதாரமாகக் கொண்ட பிரெஞ்சு ஆங்கிலக் கவிஞர்களையும் விமரிசகர்களையும் மேற்கோள் காட்டுவதை விட உலகு முழுமைக்கும் பொதுவான அறிவியல் அடிப்படையில் விவாதிப்பதில் என்ன தவறு?

(இன்னும் பேசுவேன்)
|

This page is powered by Blogger. Isn't yours?