<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

1.5.04

எனக்குப் புரியவில்லை.. 

பரத நாட்டியம் என்றொரு கலை தமிழ் நாட்டில் பரவலாகப் பலருக்கும் தெரிந்த கலையாக உள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் நடுத்தர, உயர் வகுப்புப் பெண்கள் பலரும் பரத நாட்டியம் கற்றுக் கொள்வதைத் தமக்குச் சூட்டிக் கொள்ளும் மற்றொரு மகுடமாகத் தான் கருதுகிறார்கள்.

பத்மா சுப்பிரமணியம், சித்ரா விசுவேசுவரன் போன்ற பெயர்களைக் கேட்டாலே நம்மில் பலர் புல்லரித்துப் போகிறோம். ஆடல் கலையில் அவர்களது ஈடுபாடு நம்மைப் பிரமிக்கச் செய்கிறது.

அதைப் போல் இசைக்கலையில் எம்.எஸ். அவர்களின் பெயரைச் சொன்னாலே ஒவ்வொரு தமிழனும் பெருமிதமடைகிறான். தம்மை இசைக்கு அர்ப்பணித்துக் கொண்ட அந்த இசையரசியின் இனிய குரல்வளம் எப்போது கேட்டாலும் நம்மை மெய் மறக்கச் செய்கிறது.

ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் இசைவிழாக்களும் திருவையாறு தியாகராசர் ஆராதனை நிகழ்ச்சிகளும் முழுக்க முழுக்க மரபு சார்ந்த இசைக்கே அர்ப்பணிக்கப் படுவதும் நாமறிவோம்.

‘இவையெல்லாம் மரபுசார் கலைகள்’ என்ற ஒரு வரியை மட்டும் நீங்கள் குறித்துக் கொள்ள வேண்டும்.

இந்த மரபு சார்ந்த கலைகள், கடும் பயிற்சியால் தொன்று தொட்டு நாம் பின்பற்றி வருபவை. முக்கியமாக இத்துறைகளில் ‘நான் இவரது பாரம்பரியத்தில் வருபவர்’.. ‘அவரது பாரம்பரியத்தில் வருபவர்’.. என்றெல்லாம் சொல்வது நமது பெருமையை உயர்த்திக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.

இதற்கு மாற்றாகக் கற்றறிந்த எவருக்கும் நவீன, மரபு சாராத இசையும் நடனமும் எள்ளி நகையாடத் தக்கதாகவே தோன்றுகிறது.
நவீன நாட்டியம் பற்றி எப்போதோ ஒருவர் எழுதிய வரிகள் நினைவுக்கு வருகின்றன:

“முதுகில், ஆடைக்குள் ஒரு கம்பளிப் புழு நுழைந்து விட்டால் அதை எடுத்து எறியவும் முடியாமல் அது கொடுக்கும் துயரும் தாங்காமல் ஒருவர் போடும் ஆட்டம் போல உள்ளது” என்றெல்லாம் எழுதி இருந்தார்.

இதில் எனக்கு மறுப்பேதும் இல்லை.

இத்துறைகளில் கற்றுத் துறை போகிய வித்தகர் யாவரும் மரபு சாராத நடனத்தையோ இசையையோ தம் கால் துாசிக்குக் கூடச் சமமாகக் கருதுவதில்லை. மரபு சாராத எந்தச் சோதனை முயற்சிகளையும் இவர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.

ஆகவே இசை, நாட்டியக் கலைத் துறைகளைப் பொருத்தவரை மரபு சார் முயற்சிகள் மட்டும்தான் தழைக்க முடியும். முறைப்படி கற்றவன் மட்டுமே இத்துறைகளில் கால் பதிக்க முடியும் - காலம் தள்ள முடியும் என்ற நிலைமை உள்ளது.

இதற்கு மாறாகக் கவிதைத் துறையில் மரபுக் கவிதை காணாமல் போனதை – இல்லையில்லை கொன்றழிக்கப் பட்டதை – நினைத்துக் குமுறிக் கொண்டிருக்கும் தமிழ் ஆர்வலர்களில் நானும் ஒருவன்.

அகம், புறம், மேல், கீழ்க் கணக்கு, சிலம்பு, கம்பனைத் தாண்டி வளராத தமிழாசிரியன் அல்ல நான்.

பாரதி, பாரதிதாசன், கவிமணி, கண்ணதாசனுக்குப் பிறகு நல்ல தமிழ்க் கவிஞனைக் காணவேயில்லை என்று கண்ணீர் வடிக்கும் தமிழ் வாசகன்.

தற்காலக் கவிதை உலகின் முன்னோடி பாரதி தெரிந்தோ தெரியாமலோ எழுதி வைத்துப் போன ‘வசன கவிதை’ தான் இந்தப் புது வசன கர்த்தாக்கள் தமிழைப் புரட்டிப் போட்டதற்குக் காரணம்.

பாரதியைப் படித்துள்ள எவரும் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்: அவனது ஆக்கங்களில் வசன கவிதையின் உண்மையான மதிப்பு என்ன? அவனது படைப்புக்களில் வசன நடையை ஒட்டு மொத்தமாக நீக்கி வைத்தாலும் பாரதியின் மதிப்பு எள்ளளவாவது குறையுமா? பாரதி என்றதும் நம் நினைவில் நிழலாடுவது அவனது மரபு நடையா இல்லை வசன நடையா?

புதுக் கவிதை என்ற பெயரால் தமிழை அழித்த இவர்கள் கூறுவது என்ன?

எதுகையும் மோனையும் இன்புறக் கூடி அழகிய நடையில் கவிதை வடிப்பது குற்றமாம்.

இவர்கள் உடலுக்கு அழகு தேவை.
இவர்கள் ஆடைக்கு அழகு தேவை.
இவர்கள் வீட்டுக்கு அழகு தேவை.

ஆனால் தமிழில் கவிதைக்கு அழகிய மொழிநடை இருந்தால் குற்றமாம்.

இதற்கெல்லாம் பல காரணங்கள் உண்டென்று நான் நினைக்கிறேன்.

மரபு சார் கவிதைக்கு முயற்சியும் பயிற்சியும் தேவைப்பட்டது.

கண்டதைக் கிறுக்கி விட்டுக் கவிதை என்று பெயர் சூட்ட முடியவில்லை.

இலக்கணம் படித்து எழுதுதல் கடினம் என்று இவர்கள் எண்ணிக் கொண்டார்கள்.

கல்லடுக்கி வீடு கட்டுதல் போல சொல்லடுக்கிக் கவிதை கூற முயன்றார்கள். அடுக்கும் பயிற்சியில் தோற்றுப் போய்க் கவிதை மரபையே உடைத்து நொறுக்கி விட்டார்கள்.

நல்லதோர் மனிதன் சட்டம் பயின்று வாழ்வதில்லை. தேவையுமில்லை. பயிலா விட்டாலும் அவன் சட்டத்தை மீறி வாழ்வதில்லை.

இலக்கணம் பயின்று எவரும் கவிதை எழுதுவதில்லை. கவித்துவ உணர்வுள்ளவர்கள் எழுதுவதெல்லாம் இலக்கண விதிக்குள் வரும்.

கவித்துவம் என்பது கடவுள் வரமா? தெரியவில்லை.

“ஈதல் இசைபட வாழ்தல்” என்றான் வள்ளுவன். இந்த இசைபடுதலைப் புகழ்பட என்றுதான் பலரும் பொருள் எழுதியுள்ளார்கள். நான் ‘இசைபட’ என்றே எடுத்துக் கொள்கிறேன். உள்ளத்தில் ஒலிக்கும் இசை..

எவனது உள்ளத்தில் இசை ஒலிக்கிறதோ அவன் எழுத்துக்கள் எல்லாம் கவிதையாக மலரும். அது படிப்போரின் உள்ளத்தில் இசை எழுப்பும்.

உள்ளத்தில் இசை ஒலிக்கவில்லை எனில் இவர்கள் எழுதுவது எதுவாகவும் இருக்கலாம் – கவிதையைத் தவிர.

கற்பனை நயம் போதுமாம் – கருத்தாழம் போதுமாம் – அழகிய மொழிநடை மட்டும் வேண்டாமாம்.

வாலறுந்த நரி உங்கள் நினைவுக்கு வந்தால் அது என் குற்றம் அல்ல.

அழகிய மொழிநடையிலான மரபுசார் கவிதைகள் மட்டும் தொடர்ந்திருந்தால் தமிழும் தமிழனும் மென்மேலும் வளர்ந்திருப்பர் என்று நான் நம்புகிறேன்.

கற்பனையும் கருத்துமே கவிதையென்று புதுக்கவிதையில் புரட்சி செய்த பேரரசர்கள், காசுக்குக் கவிதை எழுதும் திரைத்துறைக்கு வரும்போது மட்டும் டப்பாங்குத்து இசைக்குத் தமிழெழுதும் அவலமும் அந்த டப்பாங்குத்துப் பாடல்களைத் தமிழன் தெருவெல்லாம் முழக்கித் திரியும் அசிங்கமும் இங்கே நடந்திருக்காது என்றும் நம்புகிறேன்.

இவையெல்லாம் பலப்பல ஆண்டுகளாக என்னுள்ளே குமுறிக் கொண்டிருந்த உணர்வுகள்.

இவற்றையெல்லாம் எந்த அச்சு வடிவிலான ஊடகமும் ஏற்று வெளியிடாது என நானறிவேன்.

ஏனென்றால் நாட்டியத்திற்கும் இசைக்கும் மரபுசார் நெறிகளைத் துாக்கிப் பிடிக்கும் இவர்கள் தமிழ்க் கவிதைக்கு மட்டும் மரபை உடைத்தெறிந்தது எதனால் என்று எனக்குப் புரியவில்லை.

உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.
|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?