<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

8.5.04

உள்ளத்தில் உண்மையொளி.. 

அமைப்பு ஒன்றைக் கட்டி எழுப்புதல் பெரும்பாடு.

அதற்காகப் பலர் அல்லும் பகலும் அயராது உழைத்து வியர்வையும் குருதியும் சிந்திப் பசி நோக்காது, கண் துஞ்சாது முயன்றாக வேண்டும்.

அமைப்பின் விதிகளை உருவாக்குதலும் எளிதன்று. தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டு, கற்றவற்றை மேம்படுத்தி முன்னோக்கிச் சென்றாக வேண்டும்.

சரியான முறையில் இப்படி உருவாக்கப்பட்ட கட்டமைப்பு மட்டுமே தன் நோக்கங்களை வென்றெடுத்தாக முடியும்.

இத்தகைய சரியான அமைப்புக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் அவ்வப்போது எதிர்க் குரல்கள் எழும்பக் கூடும். அத்தகைய எதிர்க் குரல்களை உரிய முறையில் எதிர்கொள்வது அமைப்பின் கடமை.

நியாயமான எதிர்க் குரலுக்கு உரிய பதில் வழங்குவதும் நியாயமற்ற குரல்களைத் தட்டி அடக்குவதும் அமைப்பு தடம் புரளாமல் குறிக்கோளை நோக்கிய பாதையில் முன் செல்வதை உறுதிப்படுத்தும்.

நியாயமற்ற எதிர்க்குரல்கள் வலுக்குமானால் கட்டமைப்பு சிதறுண்டு போகும். நோக்கம் நிறைவேறாது. வருங்கால சந்ததி நம்மை மன்னிக்காது.

நான் அமைப்பு என்று இதுவரை குறிப்பிட்டு வந்ததை நீங்கள் எப்படிப் புரிந்து கொண்டீர்களோ எனக்குத் தெரியாது – நான் என் தாய்மொழி என்ற நோக்கில் மட்டுமே எழுதுகிறேன்.

தமிழுக்கென்று சரியான கட்டமைப்பு உண்டு இலக்கண விதிகள் உண்டு. இது பல்லாயிரம் சான்றோர் தம் ஆர்வத்தால் ஈடுபாட்டால் உழைப்பால் முன்னெடுத்துச் சென்ற மொழி.

இந்த மொழியின் கட்டமைப்பை சிதைக்கும் வகையிலான எதிர்க் குரல்கள் இன்று வலிவடைந்திருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றன.

நாம் விழித்துக் கொண்டாக வேண்டும்.

வாழ்வின் நோக்கம் மகிழ்ச்சி. மொழியின் பயனும் அதுதான். மகிழ்வளிக்காத மொழியை ஒருவன் கற்பதுண்டா?

மணமே இல்லா மலரினை
மகிழ்ந்தே எவரும் அணிவாரோ

என்றார் குழந்தைக் கவிஞர்.

இனிமையான பலாச் சுளையை மறைத்து வைத்துவிட்டு முள் நிறைந்த தோலினை எவருக்கும் உண்ணக் கொடுத்தல் தகுமோ?

மகாகவி பாரதியின் வார்த்தைகளை அப்படியே தருகிறேன்:

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப் போல் கவிப்பெருக்கும்
கலைப்பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவிகொள்வார்
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.. ..

வலைப்பதிவைத் தொடங்கி 20 நாட்களாக நான் எழுதிய எல்லாவற்றுக்குமான அடிப்படை நோக்கம் இந்த ஒரு கவிதையில் சொல்லப்பட்டுவிட்டதென நினைக்கிறேன்.

உள்ளத்தில் உண்மையொளி உண்டாக வேண்டும்..

வெள்ளத்தின் பெருக்கைப் போல் கவிப்பெருக்கால்..

தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டு.. .. தமிழன் உயர வேண்டும்.


சின்னஞ்சிறு குழந்தைகள் மொழியின் இனிமையை உணரத் தாலாட்டுக் கேட்க வேண்டும்..

சிறுவர்கள் குழந்தைப் பாடல்கள் பாடி இன்புற வேண்டும்.

மொழியின் இனிமை கற்கண்டாய் நற்கனியாய் அவர்களுக்குத் தித்திக்க வேண்டும்.

மொழியின் இனிமையை உணர்ந்தால் மொழியின்பால் ஈர்ப்பு வரும். மொழியின் மீதான ஈடுபாட்டால் கற்றல் எளிதாகும். கற்றல் எளிதானால் அறிவு வளரும். நல்லறிவு வளர்ந்தால் தமிழன் மேம்படுவான். தமிழும் மேம்படும்.


என்னருந் தமிழ்நாட்டின் கண்
எல்லோரும் கல்வி கற்றுப்
பன்னருங் கலைஞானத்தால்
பராக்கிரமத்தால் அன்பால்
உன்னத இமய மலைபோல்
ஓங்கிடும் மாட்சி எய்தி
இன்புற்றார் என்று மற்றோர்
இயம்பக் கேட்டிடல் எந்த நாளோ!

என்ன ஒரு கற்பனை! எவ்வளவு நல்ல உள்ளம்!

(இந்த சிந்தனை பாரதிதாசனுடையது என்று நினைக்கிறேன்)

நடிகனுக்கு மன்றம் வைக்கவும் அரசியல்வாதிக்குக் கொடி பிடிக்கவும் தன் வாழ்வை அழித்துக் கொண்டிருக்கும் தமிழனுக்குத் தமிழின் அருமையைப் புரிய வைக்க வேண்டும்.

அலுப்பினை ஊட்டும் வகையிலான மொழிநடையில் பயமுறுத்தும் வகையிலான படிமங்கள் குறியீடுகளைக் கூவி விற்றுத் தமிழனைத் தமிழிடமிருந்து ஓடச் செய்யும் மடமையை நிறுத்தியாக வேண்டும்.
|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?