<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

27.6.04

முகங்களும் முகமூடிகளும்  

தனக்குத் தாய் தந்தையர் சூட்டிய பெயரால் ஒருவர் அழைக்கப் படுவதற்கும் தானே தனக்குச் சூட்டிக் கொண்ட பெயரால் அவர் அழைக்கப் படுவதற்கும் என்ன வேறுபாடு?

“முத்தையா” என்று பெற்றோராலும் “நாராயணன்” என்று தத்தெடுத்த தாய் தந்தையராலும் அழைக்கப் பட்ட ஒருவர் “கண்ணதாசன்” என்று, தானே சூட்டிக் கொண்ட பெயரால் தான் நாடு முழுதும் அறியப்பட்டார். அது அவரது முகமூடியா? இல்லையே. கண்ணதாசன் என்பது தானே அவரைச் சரியாக அடையாளப்படுத்தும் பெயர்?

பெயர் என்பதே ஒருவரை அடையாளம் கண்டுகொள்ளத் தானே? பலரையும் அழைக்கும், நாடெங்கும் வழக்கில் உள்ள பெயரால் ஒருவர் அழைக்கப் படுவதை 'உண்மைப் பெயர்' என்றும் தாமே சூட்டிக் கொள்ளும் தனித்துவம் வாய்ந்த பெயரால் அழைக்கப் படுவதை 'முகமூடி' மாட்டிக் கொள்வதாகச் சொல்வதையும் நான் மறுக்கிறேன்.

“பரிதிமாற் கலைஞர்” என்றும் “மறைமலை அடிகள்” என்றும் “பெருஞ்சித்திரனார்” என்றும் “பாரதிதாசன்” என்றும் “ஜெயகாந்தன்” என்றும் இப்படியாக வழங்கப் படும் ஆயிரக்கணக்கான பெயர்கள் எல்லாம் அவர்களை மிகத் துல்லியமாக அடையாளம் காட்டத்தானே? இப்பெயர்களை எல்லாம் அவர்களின் முகமூடி எனல் தகுமோ?

ஒருவர் தன்னைப் பிறர் அறியா வண்ணம் மறைத்துக் கொள்வதற்காக மாற்றுப் பெயர் சூட்டிக் கொள்வது ஒருவகை.. பிறரிடமிருந்து தன்னை வேறுபடுத்திச் சரியாக அடையாளம் காண்பதற்காக மாற்றுப் பெயர் சூட்டிக் கொள்வது வேறுவகை.

நடைமுறை வாழ்வில் சராசரி மானுடச் சிந்தனைகளிலிருந்து மாறுபடும் எவையுமே கேள்விக்கும் கேலிக்கும் இலக்காவது இயல்புதான். இவ்வகையில் தான் மன நோயாளியையும் பேரறிஞனையும் உலகம் ஒரே தட்டில் நிறுத்திக் குற்றம் சாட்டுகிறது.

மறுமொழிப் பெட்டிகளிலும் மின்னஞ்சல்களிலும் தன் உண்மைப் பெயரையும் தன் முகவரியையும் தெரிவிக்காமல் 'பெயரிலி'யாகவே வந்து விட்டுப் போவது வேண்டுமானால் முகமூடி அணிதலாகக் கருதப்படலாம். தன்னைத் தனித்துவப் படுத்துதற்காக ஒருவன் சூட்டிக் கொள்ளும் பெயர் முகமூடி ஆகாது என்றுதான் நான் கருதுகிறேன்.

ராமன் என்ற பெயர் உள்ள ஒருவன் சோமன் என்ற பெயரில் எழுதினால் அதையும் “உண்மைப் பெயர்” என்று பலரும் கருதக் கூடும். ஆனால் அப்பெயர் அவனைத் தனித்துவப் படுத்துவதில்லையே.. ஒருவகையில் பாரத்தால் இதுதானே முகமூடி அணிவதற்கு இணையானது?

முகமூடி என்றதும் என் எண்ணங்கள் சிறகடித்து வேறொரு தளத்தில் பறக்கின்றன...

“உலகம் ஒரு நாடக மேடை.. அதில் நாமெல்லாம் நடிகர்கள்...”

“நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து நான் நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன்..”

இவை பற்றியெல்லாம் பிறகு பார்ப்போம்...
| (0) விரிவான மறுமொழி

22.6.04

நோயற்ற வாழ்வு..6 

ஓமியோபதியை ஜெர்மன் மருத்துவம் என்கிறார்கள். ஜெர்மானியரால் உருவாக்கப்பட்டாலும் இன்று இந்தியாவில் தான் நிறைய ஓமியோபதி மருத்துவர்கள் உள்ளார்கள்.

ரெய்கி, அக்கு பஞ்ச்சர் போன்றவை சீன, ஜப்பானிய நாடுகளில் உருவான மருத்துவ முறைகள். தொடுமுறையில் ஆற்றலைச் செலுத்தி நோயை குணப்படுத்தலாம் என்பது ரெய்கி. பெரும்பாலும் நம்பிக்கை சார்ந்த மருத்துவ முறை.

இன்னும் பல்வேறு மருத்துவ முறைகளைப் பலரும் பின்பற்றுகிறார்கள். அல்லோபதி ஒன்றுதான் நோய்க்கான தீர்வு என்று முடிவு செய்துவிடக் கூடாது என்பது தான் என் எண்ணம்.

எனக்கு சில வருடங்களுக்கு முன்பு தினமும் மாலை நேரத்தில் வயிற்று வலி வரும். தொப்புளை ஒட்டிய பகுதியில் மாலை தொடங்கி இரவு துாங்கும் வரை. துாங்கியதும் வலி மறந்து போகும். அடுத்த நாள் மீண்டும் தொடரும். அல்சர் என்றார் ஒரு பிரபல மருத்துவர். அமீபியாசிஸ் என்றார் வேறொருவர். அப்பென்டிசைடிஸின் ஆரம்பம் என்று மருந்து கொடுத்தார் இன்னொருவர். வயிற்றுப் âச்சி என்றும் சொன்னார் ஒருவர். ஆறு மாதங்களுக்கு மேலாகியது. வலி விடவேயில்லை.

பக்கத்து வீட்டுக்கு விருந்துக்கு வந்த பாட்டி ஒருவர் பெருங்காயமும் பனங்கற்கண்டும் சாப்பிடச் சொன்னார். தினமும் மூன்று வேளை வெறும் வயிற்றில். பத்து நாட்கள் சாப்பிட்டிருப்பேன். வலி நின்று விட்டது. திரும்ப வரவேயில்லை. பாட்டிக்கு என்ன பட்டம் கொடுக்கலாம் எம்.டி யா? எம்.பி.பி.எஸ்ஸா?

பொதுவாக மருந்துகள் எல்லாவற்றையும் நச்சுப் பொருள் என்று கருதுகிறார்கள். முள்ளை முள்ளால் எடுப்பது போல நோயை மருந்து முறியடிக்கிறது. முள் குத்தாத ஒருவரை முள்ளால் காயப்படுத்துதல் தவறு என்பது போல குறிப்பிட்ட ஒரு நோய் தாக்காத ஒருவருக்கு அதற்கான மருந்துகளை அளிப்பதும் தவறுதான்.

இந்த இடத்தில் மருந்துகளின் குணங்களைப் பற்றி சிலவற்றைக் கூற வேண்டும். அறிவியல் âர்வமாக உருவாக்கப்பட்ட எல்லா மருந்துகளுக்கும் அதன் தயாரிப்பாளர் குறிப்புச் சிட்டை (literature) ஒன்றை மருந்துடன் இணைத்தே கொடுப்பார்கள். அந்தச் சிட்டையில் எந்த வகையான நோய்க்கு, ஒரு நாளில் எத்தனை முறை, எவ்வயதினருக்கு அம்மருந்தை அளிக்க வேண்டும் என்பது போன்ற விபரங்கள் இருக்கும். அத்துடன் வேறு எந்த வகையான பாதிப்பு உள்ளவர்களுக்கு அம்மருந்தைக் கொடுக்கக் கூடாது என்பதும் தவறாகக் கொடுத்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதும் (contra-indications and anti-dotes) குறிக்கப்பட்டிருக்கும்.

இப்போதெல்லாம் மருந்தின் பெயரைக் குறிப்பிட்டுத் தேடினால் இணையத்தில் இத்தகைய குறிப்புகள் நிறையவே கிடைக்கின்றன. மருத்துவர்களையே முழுவதும் நம்பியிராமல் நாம் அதிகம் பயன்படுத்தும் மருந்துகளைப் பற்றியாவது நாம் அறிந்திருத்தல் நலம்.

என் நண்பரின் ஆறுமாதக் குழந்தை. மிகவும் உடல்நிலை சரியில்லாததால் பிரபல மருத்துவ மனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்திருப்பதாகத் தகவல் அறிந்து அங்கு சென்றிருந்தேன். நான் சென்ற போதுதான் குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து நோயாளி அறை ஒன்றுக்கு மாற்றியிருந்தார்கள். ஆனால் அந்தக் குழந்தை அழுது கொண்டே இருந்தது. பணியிலிருந்த மருத்துவரிடம் இது குறித்து சொன்ன போது குழந்தை அழாமல் துாங்குவதற்காக மருந்து ஒன்றை எழுதிக் கொடுத்தார். மருந்துச் சிட்டையை எடுத்துக் கொண்டு, நானே சென்று, அந்த மருந்தை வாங்கி வந்தேன். வெளிப்புற அட்டையைப் பிரித்து மருந்துக் குப்பியைத் தாயிடம் கொடுத்து விட்டு, அதனுடன் இருந்த விபரத்தாளினைப் படித்தவனுக்கு அதிர்ச்சி. வயிற்றுப் போக்குள்ள குழந்தைகளுக்கு இந்த மருந்தைக் கொடுக்கக் கூடாது என்ற எச்சரிக்கை அதில் இருந்தது. வயிற்றுப் போக்கினால் அவதியுற்றுத்தான் அந்தக் குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தது.

உடனே மருத்துவரிடம் ஓடி இது பற்றிக் கேட்டேன். அவர் வாயையே திறக்கவில்லை. தவறு செய்து விட்டோம் என்று நினைத்தாரோ என்னவோ. ஆனால் அருகிலிருந்த செவிலியர்கள் என்னிடம் சண்டைக்கு வந்து விட்டார்கள். மருத்துவர்கள் எல்லாம் படித்து விட்டுத்தான் வந்திருப்பார்கள் நீங்கள் ஒன்றும் அவருக்கு வழி காட்ட வேண்டாம் என்று கத்த ஆரம்பித்து விட்டார்கள். இவர்களிடம் பேசிப் பயனில்லை என்று எண்ணிய நான் குழந்தையின் தாயிடம், மிகத் தேவைப்பட்டால் மட்டும் இந்த மருந்தைக் கொடுங்கள் என்று சொல்லி விட்டு வந்தேன்.

படிப்பறிவற்ற நாட்டில் எந்த அளவுக்கு மக்கள் வஞ்சிக்கப் படுகிறார்கள் என்பதைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

எனது தாய்மாமன் பற்றி இங்கே எழுதியே ஆக வேண்டும். ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் மேலாளராக இருந்தார் அவர். நாற்பதை ஒட்டிய வயது. ஒருமுறை அவருக்கு அம்மை நோய் கண்டது. அம்மை வந்தால் மருத்துவரைப் பார்ப்பது தெய்வக் குற்றமாகி விடும் என்ற நம்பிக்கைகள் இருந்ததால் மருத்துவரிடம் செல்லவில்லை. ஆனால் நிறைய கணக்கு வழக்குகள் எழுத வேண்டிய பணியில் இருந்ததால் கை வலி இருந்திருக்கிறது. கை வலி தாங்க முடியாமல் போன ஒரு நாள் தன் மனைவியை அருகிலிருந்த மருத்துவரிடம் அனுப்பி அம்மை போட்டிருப்பதையும் சொல்லிக், கை வலிக்கு மருந்து வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

அந்த முட்டாள், வலி நிவாரணி மருந்து (Analgin) எழுதிக் கொடுத்திருக்கிறார். அம்மை நோய் இருந்தால், உடல் முழுதும் அரிப்பு, தினவு இருக்கும். உடல், நோய்க்கிருமிகளுக்கு எதிராகப் போராடி வென்றெடுக்கும். ஆனால் இந்த வலி நிவாரணி, உடலின் அரிப்பை இல்லாமல் செய்து விட்டது. நோய்க்கிருமிகள் பெருகி அவர் இரண்டு நாட்களில் இறந்தே போனார்.

உடலில் நோய்க்கிருமிகள் அத்துமீறி நுழையும் போது உடல் அதன் வெப்பநிலையைச் சற்று கூட்டி நோய்க்கிருமிகளை அழிக்கிறது. மூலகாரணத்தைக் கண்டறியாமல்.. நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்தை அளிக்காமல்.. உடல் வெப்பநிலையை மட்டும் குறைத்தால் என்ன ஆகும்?
நோய்க்கிருமிகள் பலம் பெறும். உடல்நலம் மேலும் பாதிப்படையும்.

வயிற்றுப் போக்கு என்றால் உடலுக்கு ஒவ்வாத நச்சு உள்ளே சென்றுள்ளது என்று பொருள். அதற்கு மாற்று அளிக்காமல் வயிற்றுப் போக்கை மட்டும் நிறுத்தினால், நச்சு உள்ளேயே தங்கும். வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நோய்க்கல்ல.. நோயின் அறிகுறிக்குத் தான் அல்லோபதி மருத்துவர்கள் தீர்வு காண்கிறார்கள் என்பதற்காகத்தான் இதையெல்லாம் எழுதுகிறேன்.

"ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்" என்பதெல்லாம் கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது.. பாதிக்கப் பட்டவர்கள் நம் நெருங்கிய உறவாகவோ நட்பாகவோ இல்லாத வரை.

அர்ப்பணிப்பு மனப்பாங்குள்ள மருத்துவர்கள் குறைந்து விட்டாலும், மருத்துவத் துறையின் குறிக்கோள் பணம் சேர்ப்பதே என்று ஆகிவிட்டாலும், இணையத்தில் கொட்டிக் கிடக்கும் தகவல் சுரங்கத்தில் இருந்து நம்மால் எதைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது என்பது தான் நல்ல செய்தி.

பாட்டிமார்கள் அருகில் இல்லாத காலத்தில், தொண்டை வலியோ, காது வலியோ, கண் கட்டியோ கூட நம்மை முடக்கிப் போட்டுவிடக் கூடும். அத்தகைய நிலையில் இணையத்தின் பயன் அளப்பரியது.

கூகிளில் தேடி நான் கண்ட சில நல்ல மருத்துவத் தளங்களின் பெயர்களை இங்கே தருகிறேன்:

www.goaskalice.columbia.edu

www.nlm.nih.gov/medlineplus/healthtopics.html

www.health911.com

www.mothernature.com

www.mustformums.com/grandmumsrecipes/cureindex.php3

www.healthy.net

www.emedicine.com

இந்தக் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தெரிவியுங்கள்.

நீங்கள் கண்ட எளிய மருத்துவம் ஏதேனும் இருந்தாலும் சொல்லுங்கள்.


<-----முந்தைய பகுதி...........
| (1) விரிவான மறுமொழி

14.6.04

நோயற்ற வாழ்வு..5 

மனித வாழ்விற்கு, மற்ற எல்லா வசதி வாய்ப்புக்களையும் விட, நல்ல உடல்நலம் முதன்மையான தேவை என்று நான் கருதுகிறேன்.

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்”

என்று வள்ளுவரே சொன்னது போல நோயின் மூலகாரணத்தைக் கண்டறிந்து நோய் வராமலே செய்து கொள்வது அறிவின் பால்பட்ட பண்பாகும்.

சரி. எப்படியோ நோய் வந்து விட்டது என்ன செய்யலாம்? இன்றைய நிலையில் உடனே மருத்துவரிடம் ஓடுகிறோம்.

கருத்தியல் நோக்கு (Ideological view) அழிந்து பொருளாதார நோக்கு (Materialistic view) வலுப்பெற்று வரும் நமது சமுதாயச் சூழலில் பணமே குறிக்கோளாய், மிகவும் சீர்கெட்டுப் போன துறைகளுள் மருத்துவத் துறையே முதலாவதாகத் தோன்றுகிறது.

(அறிவுள்ளவர்களும் கற்றவர்களும் அரசியலையும் திரைப்படத் துறையையும் ஒருபோதும் நாடுவதில்லை என்பதாலும் அவை ________க்கும் ________க்கும் புகலிடமாய் போனதாலும் அவ்விரண்டு துறைகளையும் நான் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.)

ஆக படித்து பட்டம் பெற்றுப் பணிசெய்யும் துறைகளுள், பணத்திற்காக மனசாட்சியை இழந்து மக்களைக் கொள்ளை அடிக்கும் துறையாக இன்று மருத்துவத் துறை ஆகிவிட்டது. சேவை மனப்பாங்குள்ள, நோயாளியின் பால் பாசமும் பரிவும் கொண்டு, அவனது நலத்தைத் தலையானதென்று கருதும் மருத்துவர்களை மிக அரிதாகத் தேடித்தான் கண்டறிய வேண்டியுள்ளது.

இதற்கு மருத்துவக் கல்வி பலருக்கும் எட்டாக் கனியாக ஆக்கப் பட்டதும் காரணமோ என்றும் தோன்றுகிறது. எப்படியோ, பட்டம் பெற்றுவரும் மருத்துவர் பலரும் தம்மிடம் வரும் நோயாளிகளைத் தேவையற்ற சோதனைகளுக்கெல்லாம் ஆட்படுத்திக், கண்ட கண்ட மருந்துகளையும் உண்ணச் செய்து, தேவையற்ற அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு, அவர்கள் உடலை சோதனைக் கூடமாக்கி, அவர்கள் வாழ்நாள் முழுதும் ஈட்டிய பொருளையெல்லாம் கொள்ளை அடித்துக் கொள்வதைத் தான் அன்றாடம் கண்டு வருகிறோம்.

இதை எல்லாம் பார்க்கும் போது உடற்பயிற்சியின் தேவையை மிகவும் வற்புறுத்தத் தோன்றுகிறது. தினமும் பயிற்சி செய்யும் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புக் குறைவு.

உடற்பயிற்சியோடு நோய்களைப் பற்றிய அறிவும், எளிய வீட்டு மருத்துவம் அல்லது கை மருத்துவமும் ஒருவர் அறிந்திருக்க வேண்டும்.

எங்கும் இருளென்று புலம்புவதை விட ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்போம் என்ற எண்ணம் தான் இப்பதிவை நான் எழுதக் காரணம்.

ஒரு நண்பர் திருமண விருந்து ஒன்றுக்குச் சென்று வந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. நகரின் மிகப் பிரபல மருத்துவ மனைக்குச் சென்று மருத்துவரைச் சந்தித்தார். அவர் இரத்தம், சிறுநீர், மலம் எல்லாம் சோதித்துப் பார்க்கும்படி சொல்லி, பிறகு மருத்துவமனையில் உள் நோயாளியாகச் சேர்த்து மூன்று தினங்கள் இரத்தத்தில் உப்பு நீர் (சலைன்?) ஏற்றி, வீட்டுக்கு அனுப்பி வைத்தார். செலவு எவ்வளவு தெரியுமா? சுமார் மூவாயிரம் ரூபாய்கள் மட்டும்தான்.

இதே போன்ற சூழலில் நான் என்ன செய்திருப்பேன் தெரியுமா? ஒவ்வொரு முறை வயிற்றுப் போக்கு ஏற்பட்டதும் ஒரு கோப்பை தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை (சீனியும்) அதில் மூன்றில் ஒரு பங்கு உப்பும் சேர்த்து கரைத்துக் குடித்துக் கொண்டே இருந்திருப்பேன். மிகவும் கட்டுப்பாடற்ற நிலையில் வயிற்றுப் போக்கு சீர் கேடடைந்தால் மட்டுமே மாத்திரைகளை உட்கொண்டு இருப்பேன். அல்லது மருத்துவரை நாடியிருப்பேன். (உப்பும் சீனியும் கலந்த நீர் 90 விழுக்காடு நல்ல தீர்வு அளித்து விடும்)ஃ

நமது உடல் ஆண்டவனின் அற்புதங்களில் ஒன்று. அது தன்னைத் தானே எப்போதும் சீர் செய்து கொள்கிறது. மருத்துவம் உடலின் செயலுக்கு உதவுவதற்குத் தானே தவிர, உடலின் இயற்கைச் செயல்பாட்டை மீறி நாம் அதற்கு நன்மை செய்துவிட முடியாது.

அதனால் தான் மருந்து உட்கொண்டால் ஏழு நாட்களிலும் இல்லாவிட்டால் ஒரு வாரத்திலும் நீர்க்கோவை குணமாகி விடும் என்று சொல்கிறார்கள்.

மேலே நான் குறிப்பிட்டது ஒரு சிறிய உதாரணம் தான்.

அல்லோபதி (அல்லது ஆங்கில மருத்துவம்) என்று அறியப்படுவது ஒன்றும் எல்லா நோய்களுக்கும் சரியான தீர்வை அளித்துவிடவில்லை. இதற்காகத்தான் இரைப்பு நோய் யோகாசன முறையில் மட்டுமே குணமடையும் என்று முந்தைய பதிவில் மெய்ப்பித்திருந்தேன்.

மஞ்சள் காமாலை என்று அறியப்படும் நோய்க்கு நமது கிராமங்களில் வழங்கப்படும் கீழாநெல்லி மட்டுமே விரைந்த தீர்வை வழங்கமுடியும்.

மூட்டுக்கள் எலும்பு தொடர்பான எந்தத் தொல்லைக்கும் நமது நுட வைத்தியசாலைகளுக்கு ஈடாக எந்த மேலை மருத்துவமும் குணமளிக்க முடியாது. அதைவிடப் பல மடங்கு பணம் பறித்து நோயாளியின் துயரைக் கூட்டத்தான் முடியும்.

இணையத் தொடர்பு வசதிகள் இருப்பதால் நமது மருத்துவர்கள் செய்யும் பல அறுவை சிகிச்சைகள் தேவையேயில்லாதவை என்பது புரிகிறது. காசுக்காக நோயாளிகள் மிரட்டப் பட்டு ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப் படுகிறார்கள் என்று தோன்றுகிறது.

சித்த மருத்துவம் என்பது தமிழ் நாட்டில் நமது முன்னோர்களாகிய சிததர்கள் பின்பற்றியது. மூலிகைகளையும் புடம் போட்ட இரும்பு போன்ற உலோகங்களையும் மருந்தாகப் பயன்படுத்தும் முறை. பாரம்பரியமாகவும் அனுபவ வாயிலாக அறிந்தும் சித்த மருத்துவம் செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. சித்த மருத்துவக் கல்லுாரிகளில் பயின்று பலர் இன்று மருத்துவத் தொழில் செய்கின்றனர்.

ஆயுர்வேதம் என்பது (வட) இந்திய மருத்துவம். மூலிகைகள், மரப்பட்டைகள், மரப்பிசின் போன்ற இயற்கை முறைகளை மட்டும் பயன்படுத்தும் முறை.

யுனானி என்பது அரேபிய மருத்துவம். பெரும்பாலும் பறவைகள் மிருகங்களின் உடலின் பகுதிகளையே மருந்தாக இதில் பயன்படுத்துகிறார்கள்.

ஒவ்வொரு நோய்க்கு ஒவ்வொரு முறை சிறப்பு வாய்ந்ததாக அமையக் கூடும். எனவே எல்லா நோய்களுக்கும் ஆங்கில மருந்துகளை நாடுவதை விட்டுவிட்டு ஓரளவு நோயைப் பற்றியும் குணப்படுத்தும் முறைகளைப் பற்றியும் தெளிந்த அறிவோடு தீர்வைத் தேடுவது நலம்பயக்கும்.
<-----முந்தைய பகுதி......................அடுத்த பகுதி----->
| (0) விரிவான மறுமொழி

10.6.04

நோயற்ற வாழ்வு..4 

ஆஸ்த்துமாவிற்கான பயிற்சிகள்:

இரண்டு ஆசனங்களை மட்டுமே நாம் பின்பற்ற இருக்கிறோம். வஜ்ராசனமும் சுகாசனமும்.

இணையத்தில் வஜ்ராசனம் பற்றி நிறையத் தளங்களில் சொல்லப்பட்டுள்ளது. கூகிள் தேடுபொறியில் “யோகாசனா” என்றோ “வஜ்ராசனா” என்றோ தேடிப் பாருங்கள்.

வஜ்ராசனம் என்பது குதிகால்களின் மேல் அமர்வது. வலது கால் பெருவிரலை இடது கால் பெருவிரலின் மீது வைத்துக் கொள்ள வேண்டும். குதிகால்களை முடிந்த அளவு விலக்கி வைத்துக் கொண்டு அவற்றின் மீது அமர வேண்டும். இசுலாமிய நண்பர்கள் தொழுகையின் போது இந்த முறையில் தான் அமர்ந்து தொழுகை செய்வார்கள். பார்க்க (இணையத்தில் கிடைத்த) படம் 1 :





சுகாசனம் என்பது சாதாரணமாக சம்மணமிட்டு அமர்வது. இந்த இரண்டு ஆசனங்களும் செய்வது மிக எளிது.

பயிற்சி 1:

முதலில் வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். முதுகு நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும். இரண்டு கைகளிலும் கட்டைவிரலையும் ஆட்காட்டி விரலையும் இணைத்து ஒரு வளையம்போல் ஆக்கிக் கொள்ளுங்கள். கைகளைத் தொடையின் மேல் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கட்டைவிரல்கள் அடிவயிற்றை அழுத்தியபடி இருக்க வேண்டும். பார்க்க படம் 2.





மூச்சை ஆழமாக உள்ளே இழுத்துக் கொள்ளுங்கள். பிறகு மூச்சை மெதுவாக வெளியேற்றியவாறு முன்புறம் குனியுங்கள். முடிந்தவரை குனியுங்கள். (மூக்கு தரையை நோக்கி வர வேண்டும். தரையைத் தொட வேண்டியதில்லை) இடுப்பு கால்களின் மேல் அமர்ந்தபடியே இருக்க வேண்டும். இடுப்பைத் துாக்கக் கூடாது. பார்க்க படம் 3, 4. இப்போது மெதுவாக மூச்சை உள்ளிழுத்தபடி நிமிர்ந்து பழைய (அமர்ந்த) நிலைக்கு வர வேண்டும்.






இதனை ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். அவசரமின்றி பதட்டமின்றி நிதானமாகக் கண்களை மூடியபடி செய்யலாம். குனியும் போது மூச்சை வெளியிடுதலும் நிமிரும் போது மூச்சை உள்ளிழுத்தலும் ஒரே சீராக நடைபெற வேண்டும். மூச்சை விட்டு விட்டு இடைநிறுத்துதல் கூடாது.

பயிற்சி 2:

அடுத்த பயிற்சியில் இரண்டு கட்டைவிரல்களையும் உள்ளங்கைக்குள் மடக்கி மற்ற விரல்களால் மூடி (குத்துச் சண்டையில் கைகளை மடக்குதல் போல) தொடையின் மேல், அடிவயிற்றுக்குக் கீழ் வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைவிரல்களும் ஒன்றை ஒன்றும், அடிவயிற்றையும் தொட்டுக் கொண்டிருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும். பார்க்க படம் 5, 6, 7. பிறகு முதல் பயிற்சியில் செய்தது போலவே மூச்சை வெளியிட்டபடி குனிந்து மூச்சை உள்ளிழுத்தபடி நிமிர வேண்டும். பார்க்க படம் 8. இதனையும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும்.







பயிற்சி 3:

சாதாரணமாக சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளவும். இதுவே சுகாசனம். உடல் நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும். இப்போது வலது உள்ளங்கையால் தொப்புளை மூடிக் கொள்ளவும். இடது கையால் வலது காதைத் தொட்டபடி ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடவும். இதனையும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். மூச்சை வெளியிடுதலும் மூச்சை உள்ளிழுத்தலும் தடைப்படாமல் ஒரே சீராக நடைபெற வேண்டும். பார்க்க படம் 9.




பயிற்சி 4:

இதில் இடது உள்ளங்கையால் தொப்புளை மூடிக் கொள்ளவும். வலது கையால் இடது காதைத் தொட்டபடி ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடவும். இதனையும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். பார்க்க படம் 10.





பயிற்சி 5:

இதில் இடது உள்ளங்கையால் வலது காதைத் மூடிக் கொள்ளவும். வலது உள்ளங்கையால் இடது காதைத் மூடிக் கொள்ளவும். ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடவும். இதனையும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். பார்க்க படம் 11.




பயிற்சி 6:

இதில் இடது உள்ளங்கையால் இடது காதைத் மூடிக் கொள்ளவும். வலது உள்ளங்கையால் வலது காதைத் மூடிக் கொள்ளவும். ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடவும். இதனையும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். பார்க்க படம் 12.




பயிற்சி 7:

கண்களை மூடிக் கொண்டு இடது உள்ளங்கையால் இடது கண்ணையும் வலது உள்ளங்கையால் வலது கண்ணையும் மூடிக் கொள்ளவும். ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடவும். இதனையும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும்.

இந்தப் படங்களை எல்லாம் குருவின் தமிழ் நுாலிலிருந்து ஸ்கேன் செய்து இணைத்துள்ளேன்.

இந்தப் பயிற்சிகள் எல்லாம் இந்திய நாடெங்கும், சிங்கை, அரபு நாடுகள் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் உள்ள மனவளக்கலை மன்றங்களில் இலவசமாகவே சொல்லித் தரப் படுகின்றன. அந்த மன்றங்களில் ஆசிரியரிடமிருந்து நேரடியாகக் கற்றுக் கொள்வதில் நிறையப் பலன்கள் உண்டு.

இந்தப் பயிற்சி நுாலைத் தமிழ், ஆங்கிலம் இன்னும் பல இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளார்கள். என்னிடமுள்ள தமிழ் நுால் நாற்பத்து ஏழாம் பதிப்பு. இதிலிருந்தே அந்த நுாலின் பயனை அறிந்திருப்பீர்கள்.

இந்த நுாலின் முடிவில் குரு சொல்லியுள்ள சில கருத்துக்கள் மிகவும் நெகிழச் செய்பவை.

“இந்த உடற்பயிற்சிகளைத் தினமும் செய்தால் உடலின் எல்லா உறுப்புக்களும் முறையாக இயங்கும். அலுவலகத்தில் எட்டு மணி நேரத்தில் செய்யும் வேலையை ஆறே மணி நேரத்தில் முடிக்கும் திறமை, வல்லமை வந்துவிடும். இவற்றைத் தினமும் செய்வதால் தொழிலில் சிறப்பு, குடும்பத்தில் சிறப்பு, மனதில் அமைதி கிட்டும்.

இந்த உடற்பயிற்சி கற்றுத் தருவதற்குக் கணிசமான கட்டணம் ரூ. 1000 என்று விதித்து விளம்பரப்படுத்தினால், மக்கள் தேடி வருவார்கள். ஆனால் ஏழை மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காகவே நாம் இதை இலவசமாகக் கற்றுக் கொடுக்கிறோம். இதனால் நீங்கள் பயன் பெற்று எனக்கு ஏதாகிலும் பதில் செய்ய வேண்டும் என்றால், ஒரு பத்துப் பேருக்கு நீங்கள் இதைச் சொல்லிக் கொடுங்கள். அது போதும்...”

<-----முந்தைய பகுதி......................அடுத்த பகுதி----->
| (4) விரிவான மறுமொழி

8.6.04

நோயற்ற வாழ்வு..3 

இரைப்பு நோய்க்கு நிரந்தரத் தீர்வைப் பற்றிச் சொல்லும் முன்பு கொஞ்சம் சுயபுராணம் பாட வேண்டிய நிலையில் இருக்கிறேன். அதற்கும் காரணம் உண்டு. இங்கே நான் சொல்லப் போவதெல்லாம் எனது சொந்த அனுபவம். பிறர் சொல்லிக் கேட்டதில்லை என்பதால் இவற்றைப் பற்றிய முழுநம்பிக்கையை என்னால் படிப்பவரிடம் ஏற்படுத்த முடியும். இந்தக் கருத்துக்களை ஆணித்தரமாக எங்கும் என்னால் சொல்ல முடியும். இவை குறித்தான ஐயங்களைத் தீர்த்து வைக்கவும் முடியும்.

எங்கள் அம்மா ஒரு ஆஸ்த்துமா நோயாளி. பிறந்தது முதல் நானும் அடிக்கடி ஆஸ்த்துமா நோய்க்கு உள்ளாகி இருக்கிறேன். அதை அப்போதெல்லாம் இழுப்பு நோய் என்றே சொல்லி வந்திருக்கிறோம்.

பெரும்பாலும் கொண்டாட்ட காலங்கள் எனக்கு நோய்வாய்ப்பட்ட காலங்களாகவே அமையும். ஒவ்வொரு பொங்கலையும் தீபாவளியையும் நான் மூச்சுத் திணறலுடன் படுத்த படுக்கையாகவே கண்டு வந்திருக்கிறேன்.

பொங்கல் சமயம் வீட்டை முழுமையாக சுத்தம் செய்வார்கள். அதனால் எப்படியாவது தூசியின் பாதிப்புக்கு உள்ளாகி விடுவேன். தீபாவளியின் போது மழையில் நனைந்தோ வெடிப்புகையினாலோ தீபாவளி இனிப்புகளை அதிகம் உண்பதாலோ இழுப்பு நோய் வந்துவிடும்.

ஒரே ஒரு வெல்லம், ஒரு ஐஸ்கிரீம், ஒரு நாள் தூக்கமின்மை அல்லது தூசி நிறைந்த இடத்தில் ஒரு நிமிடம் நின்றால் போதும் அடுத்த மூன்று நான்கு நாட்கள் நரக வேதனைதான். பார்ப்பவர்கள் பரிதாபப்படும்படியாக மூச்சு இரைக்கும். நான்கு அடி எடுத்து வைத்து நடக்க முடியாத கொடுமை.

பத்து வீடுகள் தள்ளி மருத்துவர் இருந்தார். அவரிடம் ஊசி போட்டுவரச் செல்வதென்றால் இரண்டு பேர் தாங்கிப் பிடித்துக் கொண்டு, இரண்டு வீட்டுக்கு ஒருமுறை உட்கார்ந்து, படாத பாடு பட்டு, செல்வதற்குள் பதினைந்து இருபது நிமிடம் ஆகிவிடும். அப்போதெல்லாம் இன்ஹேலர்கள் வரவில்லை. நோயின் தீவிரம் கருதி பெரும்பாலும் நரம்பில் தான் ஊசி போடுவார்கள். அது உடல்முழுதும் வெப்ப ஆவியாகப் பரவிச் செல்வதில் ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.

அதன்பிறகு சில நாட்களுக்குத் தொடர்ந்து மருந்து மாத்திரைகள் உட்கொண்டு நோயை சரிப்படுத்த வேண்டியிருக்கும். விலாப் பகுதிகளில் வெந்நீர் அல்லது தவிட்டு ஒத்தடம் கொடுப்பதில் ஓரளவு சுவாசம் இலகுவாகும். (இப்போதெல்லாம் வெந்நீர்ப் பைகளும் அகச்சிவப்பு விளக்குகளும் எளிதில் கிடைக்கின்றன.)

இப்படி எல்லாம் துயரடைந்ததால் எல்லா சிறுவர்களையும் போல் விளையாட்டுக்களில் ஈடுபட முடிந்ததில்லை. “உனக்கு நோய் வந்துவிடும்” என்று பொத்திப் பொத்திப் பாதுகாக்கும் பழக்கம்தான் எங்கள் வீட்டில் இருந்தது. அதனால் பொழுது போவதற்காக படிக்கும் பழக்கம் வந்தது.

“எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் பெரும்பாலும் ஆஸ்த்துமா நோயாளிகளே” என்ற வகையில் எப்போதோ படித்ததில் அற்ப சந்தோசம் வேறு. “சிந்தனையாளர்களுக்கு வரும் நோய் நமக்கு இருக்கிறது. நாமும் சிந்தனையாளர்தான்” என்று. என்ன சொல்ல? அடுத்த முறை பாதிப்புக்கு உள்ளாகும் போது “வாழ்வது ஏன்” என்றே கேள்வி வரும்.

“பொய்யர்களும் திருடர்களும் கயவர்களும் ஆரோக்கியமாக இருக்கிறார்களே. எந்தப் பாவமும் அறியாத எனக்கு ஏன் இந்த நோயைக் கொடுத்தாய் இறைவா” என்று எத்தனையோ நாட்கள் அழுதிருக்கிறேன்.

புத்தகங்களைத் தேடித்தேடி உறவினர் வீடுகளில் இருந்தெல்லாம் வாங்கி வந்து படித்ததால், பத்து வயதுக்குள்ளாகவே “பெங்கéர் சுந்தரம்” என்பவர் எழுதிய “யோக சிகிச்சை” என்ற நூல் எனக்குப் படிக்கக் கிடைத்தது. அதில் குறிப்பிட்டிருந்த பல யோகாசனங்களை நானாகவே சிறுவயதிலிருந்து செய்து பழகியிருக்கிறேன்.

புஜங்காசனம், தனுராசனம், அர்த்த ஹலாசனம், விபரீத கரணி, அர்த்த சிரசாசனம், யோக முத்ரா போன்ற பல எளிய ஆசனங்களை அந்த நூலில் படித்துத் தெரிந்து கொண்டு நானாகச் செய்து வந்திருக்கிறேன். பல ஆண்டுகள் இடைவிடாமல் பயிற்சி செய்தும் ஆஸ்த்துமா குறையவே இல்லை. நான் முன்பு சொன்ன காரணங்கள் எதுவானாலும் உடனே இரைப்பு நோய் வந்துவிடும்.

அப்போது யாராவது “யோகசனம் மூலம் ஆஸ்த்துமாவை குணப்படுத்தலாம்” என்று சொல்லியிருந்தால் அவர்களை எள்ளி நகையாடி இருப்பேன். “காதில் âச்சுற்றாதீர்கள்” என்றாவது கடிந்து சொல்லியிருப்பேன்.

அதற்காக நான் யோகாசன முறைகளைக் குறை சொல்லவில்லை. ஒருக்கால் நான் யோகாசனம் சொல்லித் தரும் குரு யாரிடமாவது முறைப்படி கற்றுக் கொண்டிருந்தால் தீர்வு கிடைத்திருக்குமோ என்னவோ. அதற்கெல்லாம் எங்கள் ஊரில் வாய்ப்பு இல்லை.

இதற்கிடையே என் வாழ்வின் மிகப் பெரிய சோகத்தையும் சொல்லியாக வேண்டும்.

பொதுவாக ஆஸ்த்துமா நோயாளிகளுக்கு ஆயுள் கெட்டி என்பார்கள். ஆஸ்த்துமா தொல்லை மிகுந்த வியாதியே ஒழியக் கொல்லும் வியாதி இல்லை. மூச்சு இரைத்தலையே ஒருவிதப் பயிற்சியாகக் கருதினால்.. நுரையீரல்கள் பலப்படும்.. நீண்ட நாள் வாழலாம் என்று இப்படிச் சொன்னார்களோ என்னவோ தெரியவில்லை.

வயதாக வயதாக ஆஸ்த்துமாவுக்குக் கொடுக்கப்பட்ட மருந்துகளின் வலிவையும் அளவையும் மருத்துவர்கள் கூட்டிக் கொண்டே வந்ததால், அந்த மருந்துகளின் பக்க விளைவாக இதயம் செயலிழந்து, ஆஸ்த்துமா நோயாளியான எங்கள் அம்மா தன் 54 வயதிலேயே எங்களைப் பிரிந்து சென்றார்கள். எங்கள் அப்பாவின் அம்மாவும் அம்மாவின் அம்மாவும் 80 வயதைத் தாண்டியும் வாழ்ந்த எங்கள் குடும்பத்தில் இது ஒரு மிகப் பெரிய சோகம் : ஆஸ்த்துமாவுக்கு அல்ல ஆஸ்த்துமா மருந்துக்குப் பலியான ஒரு உயிர்.

ஆக மருந்துகளின் மேல் நம்பிக்கை இழந்த நிலை. நோயை நிரந்தரமாகக் குணப்படுத்திக் கொண்டாக வேண்டிய கட்டாயம். இன்று போல் அப்போது இணையத் தொடர்பு இல்லை. “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்ற கதையாக எல்லாவிதமான மருத்துவ முறைகளையும் பின்பற்றியிருக்கிறேன். எந்த ஊரில் ஆஸ்த்துமாவிற்கு நல்ல மருந்து கொடுக்கிறார்கள் என்று கேள்விப் பட்டாலும் ஓடிச்சென்று வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன்.

இப்படித்தான் சென்னையில் அப்போது ஒரு ஆங்கில மருத்துவர் இருந்தார். அவரிடம் கூட்டங்கூட்டமாக ஆஸ்த்துமா நோயாளிகள் வருகிறார்கள். நல்ல மருந்து தருகிறார் என்று கேள்விப்பட்டு, அங்கே சென்று, காத்துக் கிடந்து, கொள்ளையாய்க் காசு கொடுத்து மருந்தை வாங்கி வந்து சாப்பிட்டால், அது முன்பே அறிமுகமான, எங்கள் வீட்டுத் தோட்டத்தில் நிரம்பிக் கிடந்த ஆடாதோடையின் சாறு!

இத்தகைய சூழலில்தான் 1988-89ம் ஆண்டுகள் என்று நினைக்கிறேன். அப்போதுதான் கொடைக்கானலில் முதன்முதலாக தொலைக்காட்சி அஞ்சல் நிலையம் அமைக்கப் பட்டு எங்கள் ஊருக்கெல்லாம் தமிழில் சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் நிகழ்ச்சிகள் காணக்கிடைத்தன.

அப்படி ஒரு நாளில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பல்வேறு நோய்களைத் தீர்ப்பதற்கான பயிற்சிகளைத் தொலைக்காட்சி வழியே வழங்கினார்கள். முழுக்க முழுக்க யோகாசனப் பயிற்சி என்று சொல்ல முடியாது. அவர்களே செய்த ஆராய்ச்சியின் பயனாக, எளிய முறையில் நோய் நீக்குவதையே நோக்கமாகக் கொண்டு, எவ்வயதினரும் செய்யத் தக்க வகையிலான பயிற்சிகளை உருவாக்கி இருந்தார்கள். முதுகுவலி, கண்பார்வைக் குறைபாடு, ஆஸ்த்துமா போன்ற பல நோய்களுக்கான பயிற்சிகள்.

அதை அவர்கள் சொல்லிக் கொடுத்த பாங்கும் பயிற்சிகளின் எளிமையும் என்னை நம்பிக்கை கொள்ளச் செய்தன. அப்போதெல்லாம் வேதாத்திரி மகரிஷி அவர்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் கேள்விப் பட்டிருக்கவும் இல்லை. ஆனால் ஆஸ்த்துமாவை குணப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வேகம் எனக்குள் இருந்தது. எனவே அவர்கள் சொல்லிக் கொடுத்த பயிற்சிகளைத் தொடர்ந்து செய்தேன். தினமும் பத்து நிமிடங்கள் போதும். காலையில் பல் துலக்குவதைப் போல இதையும் தவிர்க்க முடியாத கடமையாகக் கடைப்பிடித்தேன்.

அதன்பிறகு ஆஸ்த்துமா வரவேயில்லை என்று பொய் சொல்ல மாட்டேன். வந்தது. ஆனால் கடுமையாக இல்லை. நான் பயிற்சிகளை மட்டும் நிறுத்தவே இல்லை.

ஆறுமாதங்கள் செய்திருந்தால் போதும். நானோ இரண்டு ஆண்டுகள் இடைவிடாமல் ஒவ்வொரு நாள் காலையிலும் பயிற்சி செய்தேன். அதன்பிறகு ஆஸ்த்துமா எனக்கு அந்நியமானது. எனது தீபாவளியும் பொங்கலும் உண்மையிலேயே மகிழ்ச்சி நிறைந்ததானது. ஏறத்தாழ 14 ஆண்டுகளாக ஆஸ்த்துமா தாக்குதலே இல்லை.

ஆஸ்த்துமா நோயாளி என்று எனக்குத் தெரியவரும் எவருக்கும் இந்தப் பயிற்சிகளை (குரு வேதாத்திரி மகரிஷியிடம் நான் கற்றது என்று சொல்லி) செய்யுமாறு ஊக்கப் படுத்துகிறேன். ஆனால் குறைந்தது ஆறு மாதங்கள் தொடர்ச்சியாகச் செய்தால் மட்டுமே பலன் கிடைப்பது உறுதி என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இதில் திரும்பத் திரும்ப என் நினைவுக்கு வருவது என் நெருங்கிய உறவினர் ஒருவர். ஒருமுறை அவரது வீட்டுக்கு விருந்துக்குப் போயிருந்த போது அவரது மகள் ஆஸ்த்துமா நோய்க்கு உள்ளாகி அவதிப் பட்டுக் கொண்டிருந்தாள். பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த பெண். திருமணம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது நான் அந்தப் பெண்ணுக்கு இந்தப் பயிற்சிகளைச் சொல்லிக் கொடுத்தேன். அவரும் தினமும் அவற்றைச் செய்யுமாறு அவளை ஊக்கப்படுத்தி வந்திருக்கிறார். சில மாதங்கள் கழித்து அவரைப் பார்த்த போது என் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் மல்க “என் பெண்ணுக்கு இப்போதெல்லாம் இரைப்பு வருவதேயில்லை. பல ஆண்டுகளாகத் தினமும் வெந்நீரில் மட்டுமே குளித்து வந்த அவள் இப்போதெல்லாம் குளிர்ந்த நீரில் கூடக் குளிக்கிறாள். எந்த விதமான பாதிப்புமில்லை.. நான் தைரியமாகக் கல்யாணம் செய்து கொடுப்பேன்” என்று சொன்னார்.

இந்தப் பயிற்சிகளை எல்லாம் வேதாத்திரி மகரிஷி அவர்கள் நூல் வடிவிலும் வெளியிட்டுள்ளார்கள். தமிழில் “எளிய முறை உடற்பயிற்சி” என்ற பெயரிலும் ஆங்கிலத்தில் Simplified physical exercises என்ற பெயரிலும் இந்த நூல் கிடைக்கிறது. எல்லா நோய்களுக்கான பயிற்சிகளும் இந்த நூலில் உள்ளது. நாடெங்கும் உள்ள மனவளக்கலை மன்றங்களில் இலவசமாகவே இப்பயிற்சிகள் சொல்லித் தரப்படுகின்றன என்றும் அறிகிறேன்.

ஆஸ்த்துமாவிற்கான பயிற்சிகளை மட்டும் அடுத்த பதிவில் பார்ப்போம்.
<-----முந்தைய பகுதி......................அடுத்த பகுதி----->

| (0) விரிவான மறுமொழி

7.6.04

நோயற்ற வாழ்வு...2 

மூச்சு விடுதல் என்றதும் உலகெங்கும் பரவலாகக் காணப்படும் மூச்சு தொடர்பான நோய் ஒன்று நினைவுக்கு வருகிறது.

இரைப்பு நோய். ஆஸ்த்துமா என்று பரவலாக அறியப்படும் இந்நோய் கணை என்றும் நாய்க்கணை என்றும் சிலரால் அழைக்கப்படுகிறது. சிறுவர் முதல் கிழவர் வரை எவ்வயதினருக்கும் எக்காலத்திலும் வரக் கூடிய நோய் இது.

இது கிருமித் தொற்றுதலால் வருவது என்றோ உடல் உறுப்புக் குறைபாடு காரணமாக என்றோ திட்டவட்டமாகக் கூற முடியாத நோய். கிருமிகளால் நீர்க் கோவை (ஜலதோசம்) ஏற்பட்டு, சளிப்பிடித்து இரைப்பு வரலாம். ஆனால் நீர்க் கோவை ஏற்பட்டு, சளிப்பிடித்த எல்லோருக்கும் இந்நோய் வருமென்று சொல்ல முடியாது. இந்நோய் வரக்கூடிய உடலமைப்பு உள்ளவர்களுக்கு மட்டும்தான் வரும்.

அதே போல இதைப் பரம்பரை நோய் என்றும் சொல்ல முடியாது. பெற்றோரில் ஒருவருக்கு இந்நோய் இருந்தால் குழந்தைகளில் சிலருக்கு வரலாம். சிலருக்கு வராமலே போகலாம். பெற்றோரில் இருவருக்குமே இந்நோய் இல்லாவிட்டால் கூட குழந்தைக்கு வரலாம்.

ஒவ்வாமை காரணமாக வரக்கூடிய நோய் என்றும் இதைச் சொல்கிறார்கள். ஆனால் அந்த ஒவ்வாமை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தால் வரலாம். பொதுவாகத் துாசியின் காரணமாகப் பலருக்கும் இந்நோய் வரக்கூடும்.

காற்றறைகளில் காற்றுக் குழாய்கள் சளியின் காரணமாக அடைக்கப் பட்டு காற்று செல்லும் வழி சுருங்குவதால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இதுவே இரைப்பு நோய் என்று சொல்கிறார்கள்.

இணையத்தில் இந்நோய் தொடர்பாகத் தேடிய போது கிடைத்த சில படங்களை இங்கே இணைத்துள்ளேன். நன்றி : வர்ஜினியப் பல்கலைக் கழக இணையத் தளம்

படம் 1: நோய் ஏற்படும் முன்னர் காற்றறைகளும் காற்றுக் குழாய்களும் எவ்வாறு உள்ளன என்பதைக் காட்டுகிறது. காற்றுக் குழாய்களின் குறுக்குத் தோற்றமும் காட்டப்பட்டுள்ளது.





படம் 2: நோய் ஏற்பட்ட பின்னர் காற்றறைகளும் காற்றுக் குழாய்களும் எப்படி மாறி உள்ளன என்பதைக் காட்டுகிறது. காற்றுக் குழாய்களின் குறுக்குத் தோற்றத்தில் ஏற்படும் மாற்றமும் காட்டப்பட்டுள்ளது.





நவீன மருத்துவத்தில் இரைப்பு நோய்க்கென பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. மருந்து, மாத்திரை, ஊசி மருந்து போன்ற கற்கால மருத்துவத்தை இரைப்பு நோய்க்கு அதிகம் பேர் பயன்படுத்துவதில்லை. பல வகையான கையடக்க சுவாசக் கருவிகள் (இன்ஹேலர்) கிடைக்கின்றன.

இரைப்பு நோய்க்கு உள்ளான ஒருவர் இந்தக் கருவியை வாயில் வைத்து அழுத்தினால் மருந்து காற்று வடிவில் காற்றறைகளுக்குச் சென்று உடனடி நிவாரணம் அளித்துவிடும்.

படம் 3: காற்றுக் குழாய்களின் குறுக்குத் தோற்றத்தில் மருந்துகளால் ஏற்படும் மாற்றம் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.






நோயாளி இந்த மருத்துவத்தில் குணமடையாவிட்டால், அல்லது நோயின் தீவிரம் கடுமையாக இருந்து சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டால் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று நெபுலைசர் என்னும் கருவி மூலம் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு சுவாசித்தால் போதும். சுவாசம் உடனடியாகச் சீராகி விடும்.

சல்புடமால் போன்ற மருந்துகளை ஆரம்பத்தில் மாத்திரையாகவும் மருந்தாகவும் கொடுத்தார்கள். அது இரத்தத்தில் கலந்து வேலை செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் காற்று வடிவிலே குழாயில் அடைத்து சுவாசிக்கச் செய்து விட்டார்கள். உடனடி தீர்வு கிடைப்பது உண்மைதான்.

ஆனால் கொடுமை என்னவென்றால் நவீன அல்லோபதி மருத்துவத்தில் இரைப்பு நோய்க்கு நிரந்தரத் தீர்வு கிடையாது. ஒவ்வொரு முறை நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகும் போதும் நிவாரணம் தேட வேண்டியதுதான்.

சித்த, ஆயுர்வேத முறைகளில் ஆடாதோடை என்ற அருமருந்து கிடைக்கிறது. இரைப்பு, சளி, இருமல் எல்லாவற்றுக்கும் அற்புதமான நிவாரணி. மூன்று வேளை காய்ச்சி வடித்து கசாயமாக உட்கொண்டால் போதும். நிச்சயமான குணம் கிடைக்கும். இதுவும் கூடத் தற்காலிகத் தீர்வுதான். ஒவ்வொரு முறை இரைப்பு நோய்க்கு உள்ளாகும் போதும் உட்கொள்ள வேண்டியது தான்.

இந்த மூலிகையைத் தேடி நீங்கள் எங்கும் போக வேண்டாம். தமிழகமெங்கும் காதி கதர் நிறுவனங்களில் ஆடாதோடை மூலிகையை (இன்னும் பல நல்ல மூலிகைகளையும் கூட) பொடி வடிவில் விற்கிறார்கள். வாங்கி வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டால் போதும்.

ஆனால் ஒன்று: ஆடாதோடை, வேம்பை விடக் கொஞ்சம் அதிகமாகக் கசக்கும். குழந்தைகளை சாப்பிட வைப்பது உங்கள் சாமர்த்தியம்.

நிரந்தரமாக இரைப்பு நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? சித்த, ஆயுர்வேத, ஆங்கில மருத்துவம் எதிலுமே நிரந்தர குணமளிக்கும் மருந்துகளே இல்லையென்றால் வேறு என்ன செய்வது? இதை அடுத்த பதிவில் பார்ப்போம்..
<-----முந்தைய பகுதி......................அடுத்த பகுதி----->

| (0) விரிவான மறுமொழி

6.6.04

நோயற்ற வாழ்வு 

நான் ஒரு மருத்துவரல்ல என்பதை முதலில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். ஆனால் ஒரு அறிவியல் மாணவனாக, மானுட உடலியக்கம் பற்றிப் படித்தவற்றையும், கேட்டவற்றையும் நானே என் அனுபவ வாயிலாக அறிந்தவற்றையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதற்காக இப்பதிவை எழுதத் தொடங்குகிறேன்.

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பதெல்லாம் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நோயற்ற வாழ்வு எத்தனை பேருக்கு அமைகிறது?

நோய் என்பதை இருவிதமாகக் கருதலாம் என நினைக்கிறேன். ஒன்று உடல் உறுப்பு குறைபாட்டால், தேய்வடைதலால், முதிர்ச்சியால் அல்லது செயல்படாத் தன்மையால் தோன்றும் நோய். தலைவலி, முதுகுவலி, மூட்டுவலி, நீரிழிவு, கண்பார்வைக் குறைபாடு போன்றவை இவ்வகையில் சேரும்.

மற்றது கிருமித் தாக்குதலால் வரும் நோய். வைரஸ் என்றும் பாக்டீரியா என்றும் பல பேர்களில் அழைக்கப் படும் கிருமிகளால் தொற்றும் நோய். சாதாரண காய்ச்சல், இருமல் தொடங்கி மலேரியா, காலரா, அம்மை, யானைக்கால் போன்ற எண்ணற்ற நோய்கள் இந்த வகையில் சேரும்.

இவற்றை இன்னும் பாரம்பரியம் சார்ந்த நோய்கள் என்றும் சுற்றுப்புறச் சூழல் அல்லது காலநிலை சார்ந்த நோய்கள் என்றும் வகைப்படுத்திக் கொண்டே போகலாம்.

கிருமித் தாக்குதலால் வரும் நோய்களுக்குத் தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்ளலாம். அல்லது நோய்த் தாக்குதலுக்கு உள்ளான பிறகு மருந்துகளை உட்கொண்டு சரிப் படுத்தலாம். கிருமித் தாக்குதலில் இருந்து முழுமையான பாதுகாப்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் உடல் உறுப்புக் குறைபாடு தொடர்பான பல நோய்களும் நிச்சயமாக நம்மால் தடுக்கக் கூடியவையே. போதிய உடற்பயிற்சி, நல்ல சமச்சீரான ஆரோக்கிய உணவு ஆகியவற்றின் மூலம் இந்நோய்கள் நிச்சயமாக வராமல் செய்துவிட முடியும்.

எங்கள் வீட்டில் இரண்டு ஈருருளிகள் (அதான் சைக்கிள்கள்) உள்ளன. இரண்டும் ஒரே சமயத்தில் வாங்கியவைதான். ஒன்று தினமும் பயன்பாட்டில் உள்ளது. மற்றது ஒரு மூலையில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இப்போது சொல்லாமலே உங்களுக்குத் தெரியும் : எது நல்ல நிலையில் உள்ளதென்றும் .. எது துருப்பிடித்துப் பழுதுபட்டு நிற்கிறது என்றும்.

சின்னஞ்சிறு குழந்தை ஒன்றைப் பாருங்கள்: அது எப்படித் துரு துரு என்று தனது கையையும் காலையும் ஏன் உடல் உறுப்புக்கள் முழுவதையும் அசைத்து, ஆட்டி, செயல்படுத்திக் கொண்டே இருக்கிறது என்று. ஆனால் வளர வளர நாம் பல உறுப்புக்களைப் பயன்படுத்துவதே இல்லை. செயல்படாமல் துருப்பிடிக்க விட்டுவிடுகிறோம்.

தினமும் உடற்பயிற்சி செய்யும் ஒருவர் பொதுவாக நல்ல உடல்நலம் உள்ளவராகத் தான் இருப்பார். அதிலும் மேலைநாட்டு முறையிலான உடற்பயிற்சிகளில் உடலின் வெளித்தோற்றம் நன்கு கட்டமைப்பைப் பெறும் என்றும் யோக ஆசனப் பயிற்சி போன்ற இந்தியப் பயிற்சிகளில் உள்ளுறுப்புக்கள் நன்கு செயல்படும் என்றும் கூறலாம்.

உடலின் எல்லா உறுப்புக்களுக்கும் நல்ல இரத்தம் சென்றால் மட்டுமே அவை நன்கு இயங்கும். அதற்கு நமது முன்னோர் சொல்லிச் சென்ற யோக ஆசனப் பயிற்சிகள் நிச்சயம் உதவும்.

யோக ஆசனப் பயிற்சி என்றதும் பலரும் சிரசாசனம், சர்வாங்காசனம் போன்ற கடுமையான ஆசனங்களை நினைவு கூர்ந்து பயந்து விடுகின்றனர். அவையெல்லாம் மிக உயர்ந்த நிலையில் கற்றுக் கொள்பவர்களுக்கான பயிற்சிகள். நல்ல உடல்நலம் வேண்டும் என்று எண்ணும் சாதாரண மனிதர்களாகிய நமக்கு இவையெல்லாம் தேவையே இல்லை.

நீங்கள் இப்போது இருக்கும் நிலையிலேயே (உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ அல்லது படுத்துக் கொண்டோ) கண்களை மூடிக் கொள்ளுங்கள் (கவனம் சிதறாமல் இருப்பதற்காக) ஆழ்ந்த மூச்சு ஒன்றை மிக மெதுவாக இழுத்து விடுங்கள். மூச்சை இழுக்கும் போது நெஞ்சு நிறைய வேண்டும். மூச்சு விடும் போது வயிறு உள்ளே செல்ல வேண்டும்.

நான்கு முறை இதைத் திருப்பிச் செய்யுங்கள். அவ்வளவு தான். யோகப் பயிற்சியின் முதல் முக்கியப் பயிற்சியை முடித்து விட்டீர்கள். உங்களுக்கு ஒரு ரகசியம் தெரியுமா?

"நீண்ட மூச்சு நீண்ட ஆயுள்"

பொதுவாக நாம் சுவாசிக்கும் போது நமது காற்றறைகளின் (நுரையீரலின்) மேல்பகுதியில் உள்ள காற்றை மட்டும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம். முக்கால் பகுதிக்கும் மேலாக உள்ள காற்றறைகள் புதுப்பிக்கப் படுவதேயில்லை. சாதாரண வாழ்க்கைக்கு இது போதும் என்று இயற்கை விட்டுவிடுகிறது.

ஆனால் சில சமயங்களில் (உதாரணமாக ஓடும் போது) நீண்ட மூச்சு (பெருமூச்சு) விட வேண்டியுள்ளது. அப்போது தான் தேவையான பிராணவாயு (ஆக்ஸிஜன்) எல்லா உறுப்புக்களையும் சென்றடைய முடிகிறது. ஓடுபவன் நல்ல உடல்நலம் பெறுகிறான்.

நாம் மேலே சொன்னது போல மூச்சுப் பயிற்சிகள் செய்தால் கூட காற்றறைகளில் நல்ல காற்று நிறைந்து உடல் முழுதும் குருதி ஓட்டம் சீராகி நாம் உடல் நலத்துடன் வாழலாம்.

ஆனால் இந்த எளிய பயிற்சியைக் கூட வாழ்நாள் முழுவதும், ஒரு நாளில் பல முறையும் செய்தாக வேண்டும். அது நம் வாழ்க்கை ஓட்டத்தின் பகுதியாக வேண்டும்.
...........அடுத்த பகுதி----->

| (0) விரிவான மறுமொழி

This page is powered by Blogger. Isn't yours?