<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

27.4.04

எங்கே கிடைக்கும்  

‘தாலாட்டு’, ‘மலரும் உள்ளம்’ போன்ற நுால்கள் எங்கே கிடைக்கும் என்று வலைநண்பர் ஒருவர் வினா எழுப்பியுள்ளார்.

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா இன்று நம்மிடையே இல்லை.

அவரது ‘மலரும் உள்ளம்’ முதல் தொகுதி 1954ல் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டுத் தொடர்ந்து பல பதிப்புகளைக் கண்டுள்ளது. என்னிடம் உள்ளது 1967ல் வெளியான எட்டாம் பதிப்பு.

‘மலரும் உள்ளம்’ இரண்டாம் தொகுதி 1961ல் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டுத் தொடர்ந்துள்ளது. என்னிடம் உள்ளது 1996ல் வெளியான ஐந்தாம் பதிப்பு. இதனை நான் பழைய புத்தகங்கள் விற்கும் கடை ஒன்றில் தான் வாங்கினேன்.

இந்த இரண்டு நுால்களும் சென்னை பாரி நிலையத்தாரால் வெளியிடப் பட்டுள்ளன. நுாலில் உள்ள முகவரி 184, பிராட்வே, சென்னை-108. இந்த முகவரியில் கிடைக்கக் கூடும்.

தமிழண்ணலின் ‘தாலாட்டு’ 1963ல் காரைக்குடி செல்வி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது.. ( செல்வி பதிப்பகம், செக்காலை சாலை, காரைக்குடி-630001 ) 1966ல் வெளியான நான்காம் பதிப்பு என்னிடம் உள்ளது. தற்போது பிரதிகள் ஏதும் அவர்களிடம் இல்லை. விசாரித்த போது ‘மீண்டும் பதிப்பிக்கும் எண்ணம் உள்ளது’. என்ற செய்தி கிடைத்தது. தமிழண்ணல் அவர்களையே கேட்கலாம்..

பழைய நுாலகங்களில் நிச்சயம் கிடைக்கக் கூடும். தமிழகத்தின் எந்த நகரத்திலும் உள்ள பழைய புத்தகக் கடைகளில் பொறுமையாகத் தேடிப் பாருங்கள்..

இவை தவிர நல்ல தமிழ் கற்கும் ஆர்வலர்களுக்காக கீழ்க்காணும் நுால்களைப் பரிந்துரைக்கிறேன்:

தைப்பாவை கண்ணதாசன்

ஆசிய சோதி கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

மலரும் மாலையும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

குடும்ப விளக்கு பாரதிதாசன்

அழகின் சிரிப்பு பாரதிதாசன்
| (0) விரிவான மறுமொழி

மலரும் உள்ளம் – 3 

நான் சொல்ல வந்தது இது தான் : தாயின் மடியில் தவழும் போது கேட்கும் தாலாட்டில் தொடங்கி ஒரு முழுவளர்ச்சி பெற்ற மனிதனாகும் வரை ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தமிழின் இனிமையை அள்ளிப் பருகும் வாய்ப்பை தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் நாம் அளித்திட வேண்டும்.

“கங்கையைப் போல் காவிரி போல்
கருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்”
என்றார் பாரதிதாசன்.

தமிழைத் தவறின்றிக் கற்றால் பிற மொழிக் கல்வியும் பிற துறை அறிவும் ‘மடிதற்றுத் தான் முந்துரும்.’.

தமிழ் நாட்டில் கூடத் தமிழ் ஆர்வலர்களுக்கு இடர்களே இல்லை என்று கருத முடியவில்லை. என்னுடைய கசப்பான அனுபவம் ஒன்று. : எங்கள் ஊரில் ஒரு தமிழ்ச் சங்கம். பெரும்பாலும் தமிழ் ஆசிரியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்களை உறுப்பினராகக் கொண்டுள்ள அந்தத் தமிழ்ச் சங்கத்தில் ஆண்டு தோறும் பள்ளிக் குழந்தைகளுக்குப் போட்டிகள் நடத்திப் பரிசு வழங்கி வருகிறார்கள். தொடக்க நிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பெரும்பாலும் அறநுால் ஒப்புவித்தல் போட்டிகள்.

என் மகள் முதல் வகுப்பில் படித்த போது பள்ளிக்கு அந்தத் தமிழ்ச் சங்கத்திலிருந்து போட்டி பற்றிய அறிவிப்பு வந்தது. அதில் கலந்து கொள்ள அவளை ஊக்குவித்தேன். தினமும் அவளுடன் நானும் அமர்ந்து ஆத்திசூடி முழுவதும் மனப்பாடம் செய்ய வைத்தேன். போட்டிக்குரிய நாளும் வந்தது. ஓரு ஞாயிறு காலை. போட்டிக்கு என் மகளை அழைத்துச் சென்ற எனக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.

அங்கே போட்டிக்கு வந்து, நடுவர் முன் வரிசையாகக் காத்திருந்த சின்னஞ்சிறு மழலைகள் தம் முறை வந்ததும் ஆத்திசூடியை ஒப்புவிக்கத் தொடங்கினர்.. எப்படித் தெரியுமா?

அறஞ் செய விரும்பு.
நல்லன செய்வதற்கு ஆசைப்படு.

ஆறுவது சினம்.
கோபம் கொள்ளாமல் இரு..

இயல்வது கரவேல்.
உள்ளதை ஒளிக்காதே.

இப்படி ஒவ்வொரு வரிப் பாடலும் அதன் தொடர்ச்சியாகப் பொருளும் சொல்லிக் கொண்டிருந்தனர். கேட்கவே எனக்குச் சகிக்கவில்லை.

ஒருவாய் சோறும் ஒருபிடி மண்ணும் உண்ணச் சொல்வது போல் கொடுமையல்லவா இது?

அகர வரிசையில் எதுகை மோனையோடு அழகுற அமைந்த ஆத்திசூடியை - அதைக் கூறும் இன்பத்தை இப்படிக் கொன்றழிப்பாரும் உண்டா என்று நொந்து போனேன்.

அப்போது அந்தத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்தவர் எனக்கு நன்கு அறிமுகமானவர். நான் படித்த கல்லுாரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி ஆற்றியவர். அவரிடம் சென்று மெதுவாகக் கேட்டேன் : “ஐயா பிள்ளைகள் எல்லாம் பொருளுடன் சேர்த்தல்லவா ஒப்புவிக்கிறார்கள். இது பாடல் இன்பத்தை அழித்து விடுமே. பாடலை மட்டும் ஒப்புவிக்கச் சொன்னால் போதாதா?”.

அவருக்கு உடனே கோபம் வந்துவிட்டது. “என்ன நீங்கள் புரியாமல் பேசுகிறீர்கள். பொருள் புரியாமல் படித்தால் வாழ்க்கையில் பின்பற்ற முடியுமா?” என்று கேட்டார்.

‘நீங்கள் படித்ததை எல்லாம் வாழ்க்கையில் பின்பற்றும் அழகு தெரியாதாக்கும்’ என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறிவிட்டேன்.

என் மகள் அந்தப் போட்டியில் பங்கு பெறவே இல்லை.. வீட்டிற்குச் செல்லும் முன் அவளுக்குப் பிடித்த இனிப்புகளைப் பரிசாக வாங்கிக் கொடுத்தேன்.

பாடல்கள் எழுதப் பட்ட நோக்கமே எளிதில் நினைவில் நிறுத்துவதற்காகத் தான். உரைநடையை நினைவில் இருத்துதலைவிடப் பாடலை நினைவில் இருத்துதல் எளிது.. இவர்கள் கூறும் ‘பொருள்’ அல்லது ‘உரை’ அழகிய நடையில் உள்ள தமிழை அழுக்கு நடையில் மாற்றும் வித்தைதான்.

இத்தகைய தவறான வழிகாட்டுதல்களால் தமிழ் வளர்ச்சி - குழந்தைகளின் தமிழார்வம் – பாதிக்கப்படுகிறது..

கண்ணதாசனை உருவாக்கிய மண்ணில் எத்தனையோ கவிஞர்கள் உருவாகாமல் போனதற்கு இவர்களெல்லாம் காரணம் என்று தோன்றுகிறது.

(தொடரும்)
| (0) விரிவான மறுமொழி

26.4.04

மலரும் உள்ளம் .. 2 

தாய்ப் பாலும் தாய் மொழியும் ஈடு இணையற்றவை.

அறிவியல் வளர்ச்சியால் மாட்டுப்பால் பொடியாக்கப் பட்டதும் பிரபல நிறுவனங்களால் அவை பல்வேறு வடிவங்களைப் பெற்றுக் குழந்தை உணவாகவும், புட்டிப் பாலாகவும் மாறியதும் நாமறிவோம்.

இதன் காரணமாகத் தமது அழகைப் பராமரிப்பதாக நினைத்துக் கொண்டு தாய்ப்பால் தர மறுத்த அரைகுறைகள் பலர்.

தாய்ப் பாலை விடப் புட்டிப் பாலில் சத்து மிகுதியென நம்பிக் குழந்தைகளை வளர்த்த அப்பாவிகள் பலர்.

இவர்களுக்கெல்லாம் தாய்ப் பாலின் உயர்வை உணர்த்த மிகப் பெரும் இயக்கங்களை நடத்த வேண்டியிருந்ததும்,, அரசு ஆணை மூலமாகக் குழந்தை உணவு தயாரிக்கும் நிறுவனங்கள் தாய்ப் பாலின் மகத்துவத்தைக் குறிப்பிட்டே விளம்பரமும் வணிகமும் செய்யும் நிர்ப்பந்த நிலை ஏற்பட்டதும் நாமறிவோம்.

தாய்மொழிக் கல்விக்கும் இதே போன்ற மாற்றங்கள் ஏற்பட்டுத் தீர வேண்டும்.

அறியாமை மிகுந்த நாட்டில் உண்மையை உரத்த குரலில் சொல்லப் பலர் முன்வர வேண்டும்.

இல்லையென்றால் சுயநல சக்திகள் மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துவதை ஒருநாளும் நிறுத்த மாட்டார்கள்.

அன்று தாய்மார்கள் பாடிய தாலாட்டில் தமிழுணர்வை ஊட்டி வளர்த்தார்கள்.

என் தாய் பாடிய தாலாட்டில் அவர்கள் ஊட்டியது தமிழுணர்வு மட்டுமல்ல.. குலப் பெருமையும் குடும்பப் பெருமையும் வாழும் வழிகளும் வாழ்க்கை நெறிகளும் என்று சொல்லிக் கொண்டே போகலாம்....

உதாரணத்திற்கு ஒன்று :

மாம்பழத்தைக் கீறி வயலுக்கு உரம் போட்டுத்
தேன் பாய்ந்து நெல்வளரும் செல்வமுளார் புத்திரனோ..

மாம்பழத்தை உரமாக்கி, தேனை நீராக்கிப் பயிர் வளர்த்தலை விடவும் வளமையைத் (உள்ளதோ இல்லையோ கற்பனையிலாவது கண்டு களித்துத்) தாலாட்டாய்ப் பாடித் தமிழ் வளர்த்த நாட்கள்..

இன்னும் ஒன்று :

ஆத்தா அழுத கண்ணீர்
ஆறாகப் பெருகி...
ஆனை குளித்தோடி
குளமாகப் பெருகி..
குதிரை குளித்தோடி
இஞ்சிக்குப் பாய்ந்து
எலுமிச்சை வேரோடி..
மஞ்சளுக்குப் பாய்ந்து
மல்லிகைக்கு வேரோடி..
வாழைக்குப் பாய்ந்து
வற்றியதாம் கண்ணீரும்................

ஆனையும் குதிரையும் பெருமிதத்திற்கும் ஆற்றலுக்கும் சான்றாகுமன்றோ?

இஞ்சியும் எலுமிச்சையும் மஞ்சளும் மல்லிகையும் வாழையும் தம் நந்குணத்தால், நன்மணத்தால் மங்கலப் பண்புகளால் பயன்பாட்டால் மானுட வாழ்வோடு பிணைந்தவை அல்லவா.

தமிழ்ச் சான்றோர், பேரறிஞர் தமிழண்ணல் அவர்கள் ‘தாலாட்டு’ என்ற பெயரில் இத்தகைய பாடல்களையெல்லாம் தொகுத்தளித்து உள்ளார்கள்.
திருக்குறளோடும் திருவாசகத்தோடும் பாரதியார் பாடல்களோடும் பெரிய புராணத்தோடும் நாங்கள் போற்றிப் பாதுகாக்கும் நுால்களுள் அதுவும் ஒன்று..

தாயின் மடியில் இப்படி வளர்ந்த தமிழ் பிறகு மழலை பேசும் காலத்தில் குழந்தைக் கவிஞர் அழ..வள்ளியப்பாவின் பாடல்களோடு மலர்ந்தது.

அணிலே அணிலே ஓடி வா.
அழகு அணிலே ஓடி வா.
கொய்யா மரம் ஏறி வா
குண்டுப் பழம் கொண்டு வா

பாதிப் பழம் என்னிடம்
மீதிப் பழம் உன்னிடம்
கூடிக் கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்....

எளிமை.. இனிமை.. குழந்தைகளுக்கு ஏற்ற அழகிய.. நெருடல் இல்லாத வரிகள்.. குழந்தைக் கவிஞர் அழ..வள்ளியப்பாவின் “மலரும் உள்ளம்” என்ற நுால் முழுவதும் இத்தகைய அற்புதப் பாடல்கள்! (அவரது நுாலின் பால் எழுந்த ஈர்ப்பும் மயக்கமுமே இத்தொடருக்கு நான் இந்தப் பெயரைத் தெரிவு செய்ததின் காரணம்.)

நிலாவைக் காட்டிச் சோறுாட்டிய அவரது பாடல்வரிகளை அறியாத தமிழரும் அன்று உண்டோ?

அதன்பிறகு தொடர்ந்த பள்ளிக்கல்வி. .கண்டனுார் என்ற அந்தச் சின்னஞ்சிறு கிராமத்தில் வானுயர எழுந்த வனப்புமிகு கல்விக் கூடம். வீரப்ப செட்டியார் என்ற கொடைவள்ளல் தாம் ஈட்டிய பொருளை யெல்லாம் ஈந்து கட்டிய அற்புதக் கல்விக் கூடம். அங்கே பணியாற்றிய ஆசிரியப் பெருந்தகைகள்!

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாணவரிடமும் பத்துக் காசுகள் பெற்று அதிலிருந்து அற்புதமான குழந்தைகள் நுால்களை, அம்புலி மாமா, மஞ்சரி, கோகுலம் போன்ற சிறுவர் மாத இதழ்களை வாங்கி இளம்தளிர்களுக்குப் படிக்கும் பழக்கத்தையும் தமிழார்வத்தையும் ஏற்படுத்திய அந்தத் தலைமை ஆசிரியர்!

ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, நன்னெறி போன்ற அறநுால்களை, அவற்றிலிருந்த செய்யுள்களை – மனப்பாடப் பகுதி மட்டுமின்றி மொத்தச் செய்யுள்களையும் மனப்பாடம் செய்ய வைத்து – அதை ஊக்குவிப்பதற்காகப் போட்டிகள் நடத்தித் தமிழை உணர வைத்த தமிழாசிரியர்கள்..

எதுகை மோனையுடன் கூடிய இசைப் பாடல்களாகிய வேத உபநிடதங்களைச் சிறுவயதிலிருந்து படித்து மனப்பாடம் செய்த ஓரினம் பல நுாறு ஆண்டுகளாய் அறிவுலகை ஆண்டதை நாம் அறிவோம்.

தமிழாலும் அறிவுலகை ஆளும் தகுதியை அளித்திட முடியும் என்பதற்கு இளம்வயதில் தமிழ்ப்பாடல்களைத் தேடித் தேடிப் படித்த எண்ணற்ற அறிஞர் பெருமக்களைச் சுட்டிக் காட்டலாம். கம்பனையும் வள்ளுவனையும் இளங்கோவையும் பாரதியையும் கற்ற எவரும் ‘வேடிக்கை மனிதரைப் போலே வீழ்ந்து கிடப்பதில்லை’.

(தொடரும்)
| (0) விரிவான மறுமொழி

தெரிந்தால் சொல்லுங்கள் 

வலைப் பதிவொன்றைத் தொடங்கி விட்ட போதிலும் தினம் தினம் புதிய புதிய ஐயங்கள் தோன்றிக் கொண்டே உள்ளன.

எனக்கு இப்போது தோன்றியுள்ள சந்தேகங்கள்: யாருக்காவது விடை தெரிந்தால் சொல்லுங்கள். அல்லது எங்கே இதற்கெல்லாம் விடை கிடைக்கும் என்று தெரிநதாலாவது சொல்லுங்கள்.

1. ஒரு வலைப்பதிவில் படங்களை உள்ளிணைப்பது எப்படி?

2. சில விண்டோஸ் 98 கணிணிகளில் சில தமிழ்ப் பக்கங்கள் தெரிவதே இல்லையே என்ன செய்யலாம்? யுனிக்கோடு எழுத்துருக்களை இணைத்தும் பயனில்லை. யாழ் இணையம் தெளிவாக உள்ளது ஆனால் Blogspot பக்கங்கள் தமிழில் தெரியவில்லை..

3. குழுப்பதிவுகளில் இடம்பெற நமது ஆக்கங்களை எப்படி அனுப்புவது? பதிலுரைகளாகவா அல்லது மின்னஞ்சலாகவா? மின்னஞ்சல் என்றால் முகவரி எங்கே கிடைக்கும்? முக்கியமாக யாழ் பதிவிற்கு...

இப்போதைக்கு இவ்வளவுதான்...

நன்றியுடன்,
ஆச்சிமகன்.



| (0) விரிவான மறுமொழி

24.4.04

உவமைக் கதை  

23.4.2004 அன்று "பூச்சியப்பாபிள்ளை" என்ற உவமைக் கதை ஒன்றை சுந்தரவடிவேல் தமது வலைப்பதிவில் எழுதியுள்ளார். அதற்கு நான் கொடுத்த பதிலுரை போதிய இடமின்மையால் அரைகுறையாக இடம் பெற்றது. இருமுறை அனுப்பியும் பயனில்லை. எனவே அதை இங்கே முழுமையாக பதிவு செய்கிறேன்.

பூச்சியின் சுதந்திரத்தில் (புல்வெளியில்) பிள்ளை குறுக்கிடாமல் இருந்திருந்தால் பிள்ளையின் சுதந்திரத்தில் (வீட்டில்) பூச்சி குறுக்கிடாமல் இருந்திருக்குமோ?

அப்பாவின் வேலை ஒவ்வொருவர் சுதந்திரத்தையும் வரையறுப்பது தானோ? இல்லை இன்று எங்கும் கோலோச்சும் குதர்க்க வாதத்தைப் போலப் பிள்ளைக்கு ஒரு நியாயமும் (வாயில்லாப்) பூச்சிக்கு ஒரு நியாயமும் சொல்லிவிடலாமா?

(ஐயா நான் வலையுலகிற்குப் புதுசு.. எனக்குத் தோன்றியதை எழுதிவிட்டேன். எதையும் மனசில் வைத்து எழுதவில்லை.. உங்கள் கதைக்கு ஏதாவது காரணம் இருப்பின் வெளிப்படையாகப் பேசுங்கள்.)

அன்புடன்,
ஆச்சிமகன்

| (0) விரிவான மறுமொழி

23.4.04

மலரும் உள்ளம்  

இன்றைய இளைய தலைமுறையைப் பார்த்தால் எதிர்காலத் தமிழகம் பற்றியும் இந்தியாவைப்பற்றியும் மிகவும் கவலையாக உள்ளது. ABCDs (America Born Confused Desis) பற்றி நான் பேசவில்லை.

தமிழகத்தில் வளரும் பள்ளி மாணவர்களைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்.

இன்று தமிழகத்தில் பள்ளிப் படிப்பை முடித்து வரும் இளைஞர்களில் தொன்னுாறு சதவீதம் பேருக்குத் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ சுயமாகச் சிந்தித்துத் தவறின்றி (எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இன்றி) ஒரே ஒரு பக்க அளவிற்கு எழுதும் திறன்கூட இல்லை என்பது பரிதாபமான உண்மை. எழுதுவதே இயலாதென்றால் பேச்சுத்திறன் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

சென்ற தலைமுறையோடு ஒப்பிடும்போது இன்றைய இளைய தலைமுறையினரிடம் நான் கீழ்க்காணும் வேறுபாடுகளைக் காண்கிறேன்:

1. படிக்கும் பழக்கம் அடியோடு இல்லை.. கவிதையாகட்டும் கதைகளாகட்டும் கட்டுரைகள் அல்லது பொதுவான நுால்களாகட்டும் இவர்கள் எதையுமே படிப்பதில்லை...

2. தொலைக்காட்சிப் பெட்டிமுன் பொம்மையாக அமர்ந்து மணிக்கணக்கில் நாள் கணக்கில் நேரத்தை வீணடிக்கிறார்கள். நிகழ்ச்சிகளைத் தெரிவு செய்து பார்ப்பதில்லை.

3. இலட்சியங்கள், குறிக்கோள்கள், நோக்கங்கள் என்று குறிப்பாக எதையும் கொண்டிருப்பதில்லை. குறைந்த உழைப்பில் நிறைந்த பொருளீட்டும் பேராசை உள்ளதே அன்றி உண்மையின்பால் ஆழ்ந்த ஈடுபாடு, உழைப்பில் நம்பிக்கை, திட்டமிட்ட செயலாக்கம் என்பதெல்லாம் இல்லவே இல்லை.

4. பொய்மையும் மாய்மாலமும் நிறைந்த திரைப்படங்கள், திரைப்பட நடிகர்கள் பால் இவர்களுக்குள்ள அதீத ஈடுபாடு... இவர்களது அறிவுத்திறனையும் ஆளுமைப்பண்பையும் வளர்த்தெடுக்கும் ஆசிரியர்கள், சிந்தனையாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்களிடம் இருப்பதில்லை.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் சமுதாயம் முழுவதும் பொருளாதாரம் சார்ந்த வாழ்வை நோக்கித் திரும்பும் போது, கொள்கைகளும் கோட்பாடுகளும் காசுக்காகக் கைகழுவப்படும் போது இளைய தலைமுறையைப் பற்றி மட்டும் புலம்பி என்ன பயன்?

மாணவர்களிடம் படிக்கும் பழக்கம் இல்லாமல் போனதற்கு கல்வி வணிகமயமானதும் ஆங்கிலக்கல்வி மோகமும் காரணம் என்று தோன்றுகிறது. சென்னையைத் தவிர்த்துத் தமிழக நகரங்களில் பேசும்மொழி, தொடர்புமொழி தமிழ்தான். ஆனால் கீழ்த்தட்டு நடுத்தர வகுப்பில் தொடங்கி அனைத்துக் குழந்தைகளும் செல்லும் பள்ளிகளோ ஆங்கிலப் பள்ளிகள். பயிலும் மொழியோ ஆங்கிலம்.

தாய்மொழியே பயன்பாட்டு மொழியாக இருக்கும்போது அம்மொழியே பயிலும்மொழியாகவும் இருந்தால் மொழிச்சுமை இன்றிப் புரிந்து படிக்கலாம்.

(இதைப்பற்றி நண்பர் ஒருவரிடம் பேசும்போது ஆங்கிலத்தில் படித்ததால் தானே நம் இளைஞர்கள் பலபேர் அமெரிக்கா சென்று பணிபுரிய முடிகிறது என்றார்.. அவரிடம். "இல்லையில்லை அவர்களில் பெரும்பாலானோர் தமிழ்வாயிலாகப் பள்ளிப் படிப்பைப் புரிந்து படித்ததால்தான் ஆங்கிலமும் அவர்களுக்குச் சுலபமாகப் புரிந்தது... அறிவியலும் புரிந்தது... அமெரிக்காவிற்கும் செல்ல முடிந்தது" என்று நான் பதில் சொன்னேன்: உண்மைதானே?)

முற்றிலும் வணிக மயமான கல்விக்கூடங்களிலோ மாதம் ரூ. 300க்கும் 500க்கும் மாடாய் உழைக்கும் அப்பாவி ஆசிரியர் கூட்டம். தம் தலை எழுத்தை நொந்து கொண்டு நல்ல வேலைக்குத் தவமிருக்கும் இவர்கள் பயனுள்ள கல்வியைப் புரியும்படி போதிப்பது எப்படி?

பள்ளிநிர்வாகங்களுக்கோ நுாறு சதவீதம் தேர்வு விழுக்காடு.. மாநில முதல்நிலை.. மாவட்ட முதல்நிலை.. அடைவதுதான் குறிக்கோள் (அப்போதுதானே அடுத்த கல்வியாண்டில் நிறைய மாணவர்கள் சேர்வார்கள்?) இதனால் மதிப்பெண்ணே குறிக்கோளாய், மாணவர்கள் தேர்வு.. தேர்வு.. என்று கசக்கிப் பிழியப்படுகிறார்கள். ஒரு வரியும் புரியாமல் குருட்டு மனப்பாடம் செய்து வாந்தி எடுத்தால் அறிவு எப்படி வளரும்?

ஒரு நாளைக்கு நான்கு இட்டலி வீதம் ஒருமாத காலம் சாப்பிட்டு, சீரணித்து வாழ்வதற்கும் அந்த இட்டலிகளை சுமப்பதற்கும் உள்ள வேறுபாடு நமக்குப் புரியும். அதே வேறுபாடுதான் பாடங்களைப் படித்துப் புரிந்து கொள்வதற்கும் குருட்டு மனப்பாடம் செய்வதற்கும் உள்ள வேறுபாடு.

புரிந்து படிப்பதற்கு மொழிஞானம் தான் பெரும் தேவை. நான் இதுவரை எழுதியவற்றையெல்லாம் படித்தபிறகும் உங்கள் குழந்தைகளுக்கு பள்ளிப் படிப்பில் ஆங்கிலம் தான் பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றினால், அவர்களுடன் அன்றாடம் ஆங்கிலத்தில்
பேசிப்பழகுங்கள். ஆங்கிலத்தை பயிலும் மொழியாக மட்டுமின்றிப் பழகும் மொழியாகவும் கொள்ளுங்கள்.

பழக ஒரு மொழியும் படிக்க வேறு மொழியும் இருப்பதுதான் குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வம் இல்லாமல் போவதற்குக் காரணம். மொழியோடும் நுால்களோடும் அதன் பயனாக அறிவோடும் வளர்ச்சியோடும் அவர்கள் அந்நியப் பட்டுப் போகிறார்கள்.

உங்களுக்கு ஆங்கில அறிவு போதுமான அளவு இல்லையென்றால்...... அடுத்த கட்டுரையில் தொடர்கிறேன்....

என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் எண்ணங்களை வரவேற்கிறேன்...

அன்புடன்
ஆச்சிமகன்
| (0) விரிவான மறுமொழி

22.4.04

கற்றலின் இனிமை.. 2 

அறிவியல் அடிப்படைகளைப் புரிந்து கொள்ள பல நேரங்களில் எளிய உவமைகள் துணைசெய்யக் கூடும்.

எல்லோருக்கும் தெரிந்த ஒளி விலகல் பற்றிப் பார்ப்போம்.

ஒரு கண்ணாடிக் கோப்பையில் பாதி அளவு நீர் நிரப்பி அதில் எழுதுகோல் ஒன்றை இட்டால், அது நீர்த் தளத்தைத் தொடுமிடத்தில் உடைந்தது போல் தொன்றுகிறது.

வெவ்வேறு ஊடகங்கள் சந்திக்கும் இடங்களில் ஒளியின் பாதை நேர் கோடாக அமையாமல் கோண மாறுபாட்டிற்கு உள்ளாகிறது. இரண்டு புள்ளிகளுக்கு இடையே வரையப்படும் மிகக் குறுகிய கோடு ஒரு நேர் கோடாகத்தான் இருக்க முடியும். ஆனால் வெவ்வேறு ஊடகங்களின் வழியே செல்லும் ஒளி குறுகிய பாதை வழியே செல்லாமல் நீண்ட பாதையைத் தேர்வு செய்வது எதனால்?

இந்தக் கேள்விக்கு பெயின்மேனின் விரிவுரைகளில் ஒரு விளக்கம் காணக்கிடைத்தது.

ஒரு குளக்கரையில் நீங்கள் நிற்கும் போது உங்கள் உயிர் நண்பர் நீருக்குள் ( நீச்சல் தெரியாமல் ) உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தால் நீச்சல் தெரிந்த நீங்கள் எந்தப் பாதை வழியே ஓடிச் சென்று அவரைக் காப்பற்றுவீர்கள்?

ஓடுவது எளிதென்றும் நீந்த அதிக நேரமாகும் என்றும் நாமறிவோம். நிற்கும் இடத்தில் இருந்து நண்பரை நோக்கி நேர்க்கோடாக ஓடியும் நீந்தியும் அவரை அடைவதா அல்லது நேராகக் கரையிலிருந்து குளத்தை நோக்கி ஓடி சாய்ந்த பாதையில் நீந்துவதா அல்லது சாய்ந்த பாதையில் ஓடி நேராக நீந்துவதா?

இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் தீர்வாக நமது மனதில் ஒரு தீர்மானம் இருக்கும்: மிகக் குறுகிய காலத்தில் அவரைக் காப்பாற்றியாக வேண்டும். பாதை எது என்பதல்ல.. நேரம் எவ்வளவு என்பது தான் குறி. எனவே குறைந்த நேரத்தில் அவரை அடைவதற்கான சரியான பாதை ஒன்றை நாம் தேர்வு செய்கிறோம். ஒளியும் இதைதான் செய்கிறது.

மீண்டும் சந்திப்போம்.
ஆச்சிமகன்
| (0) விரிவான மறுமொழி

20.4.04

கற்றலின் இனிமை 

கற்றல் எப்போதும் இனிமையானது. அதிலும் பிறருக்குப் புரியாத அல்லது புரிந்து கொள்ளக் கடினமானவற்றை நாம் புரிந்து கொண்டு எளிமையாக எடுத்துச் சொல்லக் கூடுமானால்.. நம் வாழ்விற்கும் ஒரு பொருளிருக்கும்.

பல்வேறு கலை அறிவியல் துறைகளிலும் பொதுவாகக் கற்றலுக்குக் கால எல்லை உண்டு என்று நான் கருதுகிறேன். ஆனால் கணிணித் துறையிலோ அன்றாடம் புதுமைகள்! இப்படித்தான் மின்னஞ்சலும் வலைத்தேடலும் மட்டுமே இணையப் பயன்களாகக் கருதிக் காலம் கழித்த எனக்கு ஒரு இனிய நாளில் வலைப்பூக்கள் அறிமுகமானதும் வியந்துபோனேன்.

அதிலும் சுரதா, காசி,சங்கர், வெங்கட்,பாரி, செல்வராஜ்போன்று எத்தனை முன்னோடிகள்! இவர்களது வலைப்பூக்களையும் அவற்றில் புதியவர்களுக்கு இவர்களது வழிகாட்டல்களையும் படித்தறிந்த பிறகு நம்மாலும் வலைப்பூ உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதின் விளைவுதான் இந்தப்பூ...

தொடருவேன்.

அன்புடன்
ஆச்சிமகன்
| (0) விரிவான மறுமொழி
எல்லாருக்கும் வணக்கமுங்க

செட்டி நாட்டின் ஒரு மூலையிலிருந்து உலகம் முழுசுக்கும் சேதி சொல்றது நல்லாத்தான் இருக்கு.

இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கேன். நெறயப் பேசுவேன்

ஆச்சிமகன்
| (0) விரிவான மறுமொழி

This page is powered by Blogger. Isn't yours?